பிறந்த நாள் வாழ்த்து.. திமுக நிர்வாகிகளுக்கு முக ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்
சென்னை: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிறந்த நாள் வாழ்த்து சொல்ல யாரும் வரவேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் முக ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
பேராசிரியரும், திராவிட முன்றேற் கழகத்தின் பொதுச் செயலாளரும் எனது பெரியப்பாவுமான க. அன்பழகன் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
முக்கால் நூற்றாண்டு காலம் இந்த இனத்துக்கும் மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் திராவிட இயக்கத்துக்கும் பெருந்தொண்டாற்றிய பேராசிரியப் பெருமகனார் உடல் நலிவுற்றிருக்கும் இந்த சூழலில் மார்ச் 1ம் தேதி நான் எனது பிறந்தநாளை கொண்டாடும் மனநிலையில் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னிடம் இருந்து தப்ப முடியாது... இ.பி.எஸ்.க்கு ஸ்டாலின் மீண்டும் எச்சரிக்கை
எனவே கழக முன்னணியினர் நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் என் மீது அன்பு கொண்ட நண்பர்கள் யாரும் மார்ச் 1ம் தேதி அன்று என்னை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல வரவேண்டாம் என்று பணிவன்புடன் வேண்டுகிறேன்.
தமிழர் நலனுக்காக ஒப்படைத்துக் கொண்ட பேராசிரியர் நலம்பெற அனைவரும் தங்களது உள்ளார்ந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவோம்' இவ்வாறு கூறியுள்ளார்.