அமமுகவை விட்டு வெளியேறுவேன் என்பதில் எள்முனையளவும் உண்மை இல்லை: பழனியப்பன்
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைவிட்டு வெளியேறுவேன் என்பதில் எள்முனையளவும் உண்மையே இல்லை என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமமுகவில் இருந்து கலைராஜன், செந்தில் பாலாஜி ஆகியோர் திமுகவுக்கு தாவினர். அதேபோல் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் அதிமுகவிலும் இணைந்து வருகின்றனர்.
இந்த வரிசையில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன். அதிமுகவுக்குப் போவதாக முதலில் தகவல்கள் வெளியாகின. பின்னர் தங்க தமிழ்ச்செல்வனைப் போல் திமுகவுக்கு தாவ இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனிடையே தங்க தமிழ்ச்செல்வன் இன்று சென்னையில் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பழனியப்பன் கூறியதாவது:
என் இறுதி மூச்சு இருக்கும்வரை தினகரன் மட்டுமே எனக்குத் தலைவர். அமமுகவில் இருந்து நான் வெளியேறுகிறேன் என்கிற தகவலில் எள் முனையளவும் உண்மை இல்லை.
இவ்வாறு பழனியப்பன் கூறினார். அமமுகவில் மாஜிக்கள் பட்டியலில் பழனியப்பன், வெற்றிவேல் இருவர்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.