நான் போக மாட்டேன்.. டிவியில் பார்த்துப்பேன்.. கருணாநிதி சிலை திறப்பு பற்றி அழகிரி பரபரப்பு பேட்டி
சிலை திறப்பு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என்று கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை: சிலை திறப்பு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என்று கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். அதே நேரம் விழாவை தொலைக்காட்சியில் பார்த்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதிதாக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதியின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் சோனியா காந்தி கலந்து கொண்டு சிலைகளை திறக்க உள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் மாலையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
சோனியா காந்தி பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சென்னைக்கு வருகின்றனர். இதனையொட்டி, சென்னை விமானநிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நினைவிடத்தில் அஞ்சலி
சிலை திறப்பு விழா முடிந்த பின் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று சோனியா அஞ்சலி செலுத்த உள்ளார். தலைவர்கள் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
டி.வி-யில் பார்ப்பேன்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவை தொலைக்காட்சியில் பார்த்துக்கொள்வேன் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிலை திறப்பு விழாவில் பங்கேற்கப்போவதில்லை, அந்த விழாவிற்கு செல்ல மாட்டேன் என்றார்.
மீண்டும் திமுக?
கருணாநிதியின் மறைவுக்கு பிறகு முக்கிய பொறுப்புடன் திமுகவில் மு.க. அழகிரி இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால், தனது ஆதரவாளர்களை திரட்டி பல நிரூபிக்க எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்ததாக பார்க்கப்படுகிறது. அதன் பிறகு எந்த அறிவிப்பையும் வெளியிடமால் ஒதுங்கி இருந்த மு.க. அழகிரி. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்க உள்ள கருணாநிதியின் சிலை திறப்பு விழாவை தொலைக்காட்சியில் பார்த்துக்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.