விட மாட்டேன்.. விரட்டி வேலை பார்ப்பேன்.. எல்லா சிலையும் திரும்ப வரும்.. பொன் மாணிக்கவேல்
இனி எல்லா சிலையும் திரும்ப வரும் என்று பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: "சார்... இது கடமை சார்.. சம்பளம் கூட தேவையில்லை... இனி சிலை திருடர்களை மொத்தமாக பிடிப்பதுதான் என் முதல் வேலையே" என்று நம்பிக்கை பிடிப்புள்ள வார்த்தைகளை சொல்லி உள்ளார் பொன்.மாணிக்கவேல்.
யார் விட்டாலும் இவரை நீதிமன்றம் விடாது போலிருக்கிறது. சிபிஐ விசாரணை வேண்டும் என்று சொல்லப்பட்ட போதும் சரி, இப்போதும் சரி, இவரை விட கோர்ட்டுக்கு மனசே இல்லை.
சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இன்று ஓய்வுபெறும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேலை ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கம்பீர வார்த்தைகள்
இந்நிலையில், தனது பணி நீட்டிப்பு குறித்து பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அதில், ஏற்கனவே இருந்த கம்பீரத்துடன், கூடுதல் வீரியத்துடனும், நம்பிக்கையுடனும் அளித்த வார்த்தைகள்தான் இவை:
விட மாட்டேன்
"கூடுதல் பொறுப்பை எந்த அளவுக்கு திறம்பட செய்ய முடியுமோ அதை செய்வேன். இப்போது என்னுடன் இருக்கும் எனது டீம் அப்படியே இனிமேலும் இருக்கும். எனது டீமில் யாருக்கும் லைட்டான தொந்தரவு வந்தால் கூட விட மாட்டேன். அவர்களுக்கு எதுவும் ஆகிவிடாமல், முழுக்க முழுக்க பொறுப்பு எடுத்துக் கொண்டு செயல்படுவேன்.
மாநிலம்தான் முக்கியம்
நாங்கள் அனைவருமே உங்களுக்காகத்தான் இருக்கிறோம். இந்த மாநிலத்துக்காகத்தான் வேலை பார்க்கிறோம். இது எனது கடமை சார்.. இப்படிப்பட்ட கடமையை செய்ய நான் சம்பளம் கூட வாங்காமல் வேலை பார்ப்பேன். தமிழகத்தில் 20,000 கொலைக் கேஸைகள் இருக்கின்றன. இவற்றினை கூட சம்பளமே வாங்காமல் நான் பார்க்கத் தயாராக இருக்கிறேன்.
பணி நீட்டிப்பு
இனி சிலைத் திருடர்களை மொத்தமாக பிடிப்பதுதான் என்னுடைய முதல் வேலையே. இந்த வழக்கை முழுமையாக முடிக்காமல் விட மாட்டேன், முடிச்சே தீருவேன். ஹைகோர்ட் இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை. ஹைகோர்ட் எடுத்த முயற்சியால்தான் இந்த பணி நீட்டிப்பு சாத்தியமானது. வேகமாக நான் வேலையை பார்க்க போகிறேன்.
7 சிலைகள் வரப்போகுது
இனி கும்பகோணம் அல்லது திருச்சிதான் என் டார்கட். அங்கதான் தங்கி என் குழுவை விரட்டி வேலை பார்க்க போகிறேன். வெளிநாடுகளிலிருந்து அத்தனை சிலைகளும் திரும்ப நம்ம மண்ணுக்கு வந்து சேரும். ஆஸ்திரேலியாவிலிருந்து 7 முக்கியமான சிலைகள் வரப் போகின்றன.
எப்ஐஆர் இல்லை
ஆனால் எங்களை மிக எளிதாக பார்க்கிறார்கள். ஒவ்வொரு கேசிலும் நிறைய சிக்கல்கள் உள்ளன. நான் சர்வீஸிலேயே இல்லாத சமயத்தில் நடந்த கேஸையெல்லாம் எடுக்கிறோம். பல வழக்குகளில் எப்ஐஆர் கூட இல்லாமல் இருக்கிறது. நான் என்னுடன் பணியாற்றுபவர்களுக்கு சார்ஜ் கொடுத்ததில்லை. அதை செய்ததே இல்லை. சத்தம் போடுவேன், மிரட்டி உருட்டி வேலை வாங்குவேனே தவிர யாருடைய வயிற்றிலும் அடிக்க மாட்டேன்.
கையெடுத்து கும்பிட்டார்
நான் ஓய்வு பெறுவதை அறிந்து பல கான்ஸ்டபிள்கள் வந்திருந்தனர். இதை நான் எதிர்பார்க்கவில்லை. அவர்களிடம் வேலை நிமித்தம் கடுமையாக நடந்து கொண்டிருப்பேன், திட்டியிருப்பேன். ஆனால் அதையெல்லாம் மனதில் கொள்ளாமல் வந்து ஐயா ஓய்வு பெறுகிறார் என்று கூறி நின்றார்கள். அதைப் பார்க்கும்போது நானும் ஓரளவு நல்லாதான் வேலை பார்த்திருக்கிறேன் என்ற திருப்தி வருகிறது என்று கூறி கையெடுத்துக் கும்பிட்டு நெகிழ்ந்தார் பொன் மாணிக்கவேல்.