யாழ்பாணம் சென்ற முதல் இந்திய பிரதமர் நான்! இலங்கைக்கு எல்லா உதவியும் செய்வோம்: சென்னையில் மோடி உரை
சென்னை: பொருளாதார நெருக்கடியால் சிக்கித்தவித்து வரும் இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையான உதவிகளையும் செய்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைத் துறையின் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி இருக்கிறது.
கச்சத் தீவு மீட்பு, தமிழுக்கு இந்திக்கு இணையான அங்கீகாரம் தேவை! மோடியிடம் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னை முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளன. சுமார் 22,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

பிரதமர் மோடி
சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆகியோர் வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் அடையாறு சென்றடைந்தார். அங்கு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளித்தார்.

பாஜக வரவேற்பு
பிரதமர் மோடியை வரவேற்க சுமார் 5 ஆயிரம் பாஜக தொண்டர்கள் சாலையோரங்களில் திரண்டிருக்கின்றனர். அவர்களுடன் பிரதமர் மோடிக்கு காவி மயமான வரவேற்பு அளிக்க காவி உடைகள் அணிந்த கலைஞர்களை கொண்டு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. காவி உடை அணிந்த கலைஞர்கள் கராத்தே, பரத நாட்டியம், கதகளி, சிலம்பம் போன்ற கலைகளை செய்துகாட்டி பிரதமரை வரவேற்றனர்.

தமிழை புகழ்ந்த பிரதமர் மோடி
இதனை தொடர்ந்து நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. இதில் தமிழ்நாட்டுக்கான 6 முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம் என்று கூறி உரையை தொடங்கினார். "தமிழ்நாடு வருவது எப்போது மகிழ்ச்சிக்கு உரியதே. தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரம் சிறப்பு வாய்ந்தது. தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது.

இலங்கை உதவும் இந்தியா
இலங்கை கடினமான சூழ்நிலையை கடந்துகொண்டிருக்கிறது. அங்கே இருக்கும் சூழல் நிச்சயமாக உங்களுக்கு கவலையை தரும். ஒரு நெருங்கிய நண்பனாகவும், அண்டை நாடாகவும் இந்தியா இலங்கைக்கு அனைத்து வகையான உதவிகளையும் வழங்கி வருகிறது. நிதி உதவி, எரிபொருள், உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய உதவிகளை இந்தியா அளித்து வருகிறது. பல இந்திய அமைப்புகள், தனி நபர்கள், இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி, மலையக தமிழர்கள் உட்பட அந்நாட்டில் இருக்கும் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்துள்ளார்கள்.

யாழ்பாண பயணம்
இலங்கைக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பாக சர்வதேச அரங்கில் இந்தியா பேசி வருகிறது. ஜனநாயகம், ஸ்திரதன்மை, பொருளாதார மீட்பு தொடர்பாக இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும். இலங்கையின் யாழ்பாணத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன் சென்ற எனது பயணத்தை மறக்க முடியாது. யாழ்பாணம் சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான். இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசு பல்வேறு உதவிகளை மேற்கொண்டு வருகிறது. உடல்நலம், போக்குவரத்து, கலாச்சாரம் சார்ந்த உதவிகளை இந்தியா வழங்குகிறது." என்றார்.