ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. 9 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமனம்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த மாதம் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
கடந்த 2016ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதன் பிறகும் சுமார் மூன்று ஆண்டுகள் வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை.
இதனால் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடைபெற வேண்டிய பல பணிகள் முடங்கிப்போனது. அதேபோல மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அனுப்பிய பல கோடி நிதியும் திரும்பி அனுப்பப்பட்டன.
உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி.. அரசியலில் ஆழம் பார்க்கிறாரா விஜய்?
உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கண்டித்ததைத் தொடர்ந்து கடந்த 2019இல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதிலும், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகள் மற்றும் நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. விடுபட்ட அந்த 9 மாவட்டங்களில் செப். 15ஆம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
9 மாவட்டங்கள்
இந்தச் சூழலில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. தமிழ்நாட்டில் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வரும் அக்டோபர் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் செப். 22ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
தேர்தல் பார்வையாளர்கள்
இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அமுதவல்லி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சம்பத், விழுப்புரம் மாவட்டத்திற்கு பழனிசாமி ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு விவேகானந்தன், வேலூர் மாவட்டத்திற்கு விஜயராஜ் குமார், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மதுமதி, திருபத்தூர் மாவட்டத்திற்கு காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எப்போது தொடங்குவார்கள்
நெல்லை மாவட்டத்திற்கு ஜெயகாந்தன், தென்காசி மாவட்டத்திற்கு பொ சங்கர் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 9 பேரும் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாளில்(செப் 22) அந்தத்தந்த மாவட்டங்களுக்குச் சென்று தேர்தல் கண்காணிப்பு பணியைத் தொடங்குவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடைபெறுவதைக் கண்காணிப்பார்கள்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.