தீக்குளித்த சென்னை அஞ்சப்பர் ஹோட்டல் ஊழியர் சிகிச்சை பலனின்றி பலி!
Recommended Video
சென்னை: பாண்டி பஜார் அஞ்சப்பர் ஓட்டல் முன் தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெயர் பெற்ற அஞ்சப்பர் அசைவ உணவகம் அமெரிக்கா, லண்டன், துபாய் என உலகம் முழுவதும் கிளைகளை கொண்டுள்ளது. இந்த உணவகங்களில் ஏராளமான இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை பாண்டி பஜாரில் உள்ள அஞ்சப்பர் உணவகத்தில் உதய சங்கர் என்ற இளைஞர் வேலை பார்த்து வந்தார். 25 வயதான உதய சங்கருக்கு ஹோட்டல் நிர்வாகம் கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என தெரிகிறது.
உதய சங்கர் பலமுறை ஊதியத்தை கேட்டும் நிர்வாகம் வழங்க முன்வரவில்லை. இதனால் மனமுடைந்த உதய சங்கர் நேற்றிரவு பாண்டிபஜாரில் உள்ள அஞ்சப்பர் ஹோட்டல் முன்பு திடீரென தீக்குளித்தார்.
இதனைக்கண்ட அப்பகுதியினரும் ஹோட்டல் ஊழியர்களும் உதயசங்கரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட உதய சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் உதய சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.