எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா மருந்து.. பரிசோதனை நடத்த அனுமதி அளித்தது ஐசிஎம்ஆர்
சென்னை: தமிழகத்தில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை சோதிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அனுமதி அளித்துள்ளது.
கொரோனா வைரஸ்க்கான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கும் பணிகளில் உலகமே போராடி வருகின்றன. எந்த மருந்தாவது இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடதா என்று பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன
காற்றில் விஷம் போல் பரவி மனிதர்களை கொல்லும் இந்த கொடூர கொரோனா வைரஸை அழிக்க இந்தியாவும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்து மற்றும் இந்தியாவின் பாரத் பயோடெக் கண்டுபிடித்த கோவாக்சின் உள்ளிட்ட மருந்து பல்வேறு கட்ட சோதனைகளில் வெற்றி பெற்று, தற்பொழுது மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனை நடத்தப்படுகிறது.
இதேபோல் தமிழகத்தில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் கடந்த மார்ச் மாதம் முதல் ஆராய்ச்சி செய்து தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை விலங்குகளிடம் பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் (ஐசிஎம்ஆர்) விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. இந்த முயற்சிக்கு ஐசிஎம்ஆர் அனுமதியளித்துள்ளது.
எனவே இனி தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா மருந்து, முதலில் எலி, முயல் உள்ளிட்ட சிறிய விலங்குகளுக்கு செலுத்தப்படும் இந்த பரிசோதனை விரைவில் துவங்கப்பட உள்ளது. இதில் வெற்றி பெற்றவுடன் அடுத்தகட்ட சோதனை துவங்கும் என டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் கூறியுள்ளது.