அமெரிக்காவில் சோழர் கால பார்வதி சிலை.. மீட்கும் பணி தீவிரம் - குழுவிற்கு ஜெயந்த் முரளி வாழ்த்து
சென்னை: கும்பகோணம் நடனபுரீஸ்வரர் சிவன் கோவில் சோழர் கால பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். 52 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அந்த சிலை விரைவில் மீட்கப்பட்டு தமிழகத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் சிவன் கோயிலில் கடந்த 1971-ம் ஆண்டு கோயிலின் பூட்டை உடைத்து அங்கிருந்த பார்வதி சிலை, நடராஜர் சிலை, கோலு அம்மன் சிலை உட்பட 5 பஞ்ச லோக சிலைகள் திருடப்பட்டிருப்பதாக கடந்த 2019ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் கே.வாசு என்பவர் புகார் அளித்தார். மேலும் கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இந்த சிலைகள் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், அதனை கண்டுபிடிக்கக்கோரி மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வெளிநாடுகளில் உள்ள பல்வேறு அருங்காட்சியங்கள் மற்றும் ஏல மையங்களில் திருடு போன சிலைகளை தீவிரமாக தேடி உள்ளனர். அப்போது அமெரிக்காவின் போன்ஹாம்ஸ் ஏல இல்லத்தில் 50 செமீ உயரம் கொண்ட சோழர் காலத்து பார்வதி சிலை ஒன்று இருப்பதை சிலை கடத்தல் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள பார்வதி சிலையின் புகைப்படத்தை வைத்து ஒப்பிடும் போது நடனபுரீஸ்வரர் கோயிலில் காணாமல் போன பார்வதி சிலை என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.
இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள பார்வதி சிலையின் புகைப்படத்தை வைத்து ஆராய்ந்து ஒப்பிடும் போது நடனபுரீஸ்வரர் கோவிலில் காணாமல் போன பார்வதி சிலை என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் மாநில தொல்லியல் துறையின் நிபுணரும் இதை உறுதி செய்தார்.
இந்த பார்வதி சிலை 12ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதும், 16 கோடிக்கு மேல் விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 1971ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட இந்த சிலை நியூயார்க்கில் விற்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
மேலும் ஆவணங்களை அடிப்படையாக வைத்து அமெரிக்காவில் உள்ள ஏல இல்லத்தில் இருந்து யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் பார்வதி சிலையை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விரைவில் தாண்டந்தோட்டத்தில் உள்ள நடனபுரீஸ்வரன் சிவன் கோயிலில் பார்வதி சிலை வைக்கப்படும் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
பார்வதி சிலை கண்டுபிடிக்கப்பட்டதற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை இயக்குநர் ஜெயந்த் முரளி ஐ.பி.எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். தாண்டந்தோட்டத்தில் உள்ள நடனபுரீஸ்வர கோவிலில் இருந்து நியூயார்க்கில் உள்ள போன்ஹாம்ஸ் ஹவுஸுக்கு திருடப்பட்ட திரிபங்க தோரணையில் பார்வதியின் நேர்த்தியான பழங்கால விக்கிரகத்தை கண்டுபிடித்ததற்காக எனது குழுவிற்கு வாழ்த்துக்கள். அந்த சிலையை தமிழகத்திற்கு திரும்ப கொண்டு வர ஆவணங்களை தயார் செய்துள்ளது என்றும் ஜெயந்த் முரளி கூறியுள்ளார்.