'சிலை கடத்தல்'.. டி.எஸ்.பி.காதர் பாட்ஷா மீதான வழக்கை ரத்து செய்ய ஹைக்கோர்ட் மறுப்பு
சென்னை: சிலை கடத்தல் விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி.காதர் பாட்ஷா மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.
கடந்த 2008ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆளடிப்பட்டி கிராமத்தில் அரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் தோண்டும் பணியின்போது 6 ஐம்பொன் சிலைகள் கிடைத்ததாகவும், அதை கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் காதர் பாட்ஷா, உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோர் 6 கோடி ரூபாய்க்கு சிலைகளை விற்றதாக குற்றாச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து இருவர் மீதும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சிலைகளை விற்ற காவல் ஆய்வாளராக இருந்த காதர் பாட்ஷா டி.எஸ்.பி யாகவும், ஏட்டு-வாக இருந்த சுப்புராஜ் ஆய்வாளரகாவும் பதவி உயர்வு பெற்றுள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை கோரி யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழ்க்கை விசாரித்த உயர் நீதிமன்ற உத்தரவுபடி விசாரணை மேற்கொண்ட ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர், டிஎஸ்பி காதர் பாட்சா, சுப்புராஜ் உள்ளிட்டோர் மீது 2017ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. அதற்கு பின்னர் டிஎஸ்பி காதர் பாட்சா சஸ்பெண்டும் செய்யப்பட்ட நிலையில், கைதும் செய்யப்பட்டு ஜாமினில் வெளியில் வந்தார்.
பெண்ணை.. நடுரோட்டில் கட்டிப்பிடித்து முத்தம்.. பெட் கட்டிய இளைஞன்.. கைது செய்து லாடம் கட்டிய போலீஸ்
இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி டிஎஸ்பி காதர்பாட்சா, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 9 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும், சாட்சியங்களின் வாக்குமூலங்களை முழுமையாக ஆய்வு செய்யாமல் தன் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று சென்னையில் தீர்ப்பளித்த நீதிபதி பாரதிதாசன், வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்ற காதர் பாட்ஷா மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.