சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றம்.. பொன்.மாணிக்கவேல் கடிதம்
சென்னை: சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அதிகாரிகள் வழங்கிடுமாறு ஐ.ஜி. பொன் மாணிக்க வேல், உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு அவருக்கான பதவி காலத்தை சென்னை ஹைகோர்ட் நீடித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், சிலை தடுப்பு பிரிவில் இருந்த அதிகாரிகளின் பணிக்காலம் முடிந்துள்ளதால், வேறு பணிகளுக்கு அவர்களை அரசு மாற்ற உள்ளது. இதனால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பொன்.மாணிக்கவேலை தவிர வேறு அலுவலர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு, கூண்டோடு காலியாகும் சூழல் உருவாகியுள்ளது.
பணி நீடிப்பு பெற்றும், பொன்.மாணிக்கவேல் தனது பணிகளை முழு வீச்சில் செய்ய முடியாத அளவுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்த இடங்களுக்கு உரிய அதிகாரிகளை நியமித்து நிரப்புமாறு பொன்.மாணிக்கவேல், உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். 60 பேர் கொண்ட குழுவில், 14 சப்-இன்ஸ்பெக்டர்களும் இடம் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.