'மாபியா' ஆதரவை பாஜக-அதிமுக பெற்றால் துக்ளக் ஆதரிக்காது.. குருமூர்த்தி திடீர் விளக்கம்!
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மன்னார்குடி மாபியா என்றுதான் கருதுவதாக துக்ளக் ஆசிரியரான, ஆடிட்டர் குருமூர்த்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய குருமூர்த்தி, அதிமுகவுடன்-சசிகலா இணைந்து செயல்பட வேண்டும் என்ற தொனியில், பேசியதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில்தான், குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதை பாருங்கள்:
குருமூர்த்தி டுவீட்டுகள்
1987ம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ராஜீவ்காந்தி அரசின் ஊழல்களை அம்பலப்படுத்த சந்திராசாமி உதவியை நாடியது. சந்திராசாமி நல்லவர் இல்லை என்ற போதிலும் இந்த விஷயத்தில் அவரது உதவியை பெற்றது பற்றி அருண்ஷோரி இப்படி ஒரு விளக்கம் அளித்தார்: தீ பற்றிக் கொண்டு எரியும் போது கங்கைநதிக்காக காத்துக் கொண்டிருக்க முடியாது. சாக்கடை நீரையும் அள்ளி வீசி நெருப்பை அணைக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது என்றார்.
துக்ளக் ஆதரிக்காது
துக்ளக் ஆண்டு விழாவின்போது பாஜக-அம்மா முன்னேற்றக் கழகம் மற்றும் அழகிரி ஆகியோருடன் இணைந்து திமுகவை எதிர்க்குமா என்று என்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது இந்த உதாரணத்தை நான் பதிலாக சொன்னேன். பாஜக என்ன செய்யப்போகிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்பது துக்ளக் இதழ் நிலைப்பாடு. ஒருவேளை.. வாசகர் என்னிடம் கேட்டதைப் போல பாஜக மற்றும் அதிமுக கட்சிகள், நாம் யாரை சாக்கடை நீர் என்று கருதுகிறோமோ, அவர்களின் ஆதரவை பெறுமானால், அப்போது அதை துக்ளக் ஆதரிக்காது.
மாபியா
எனவே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு, நான் ஆதரவு தருவதாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? அமமுக கட்சியை, யாரோ ஒருவர் கூறியதை போல, நான் இன்னமும் மன்னார்குடி மாபியா என்று தான் கருதி வருகிறேன். ஒருவேளை பாஜக அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் கூட, மாபியா என்றுதான் அழைப்பேன்.
அதிமுக குடும்ப கட்சியாகும்
மன்னார்குடி மாபியாவை மாபியா என்றுதான் துக்ளக் பார்க்கும். அதிமுகவை, திமுக போல ஒரு குடும்ப கட்சியாக அந்த மாபியா மாற்றி விடும் என்று துக்ளக் நம்புகிறது. எங்களுடைய கருத்து மாறப்போவது கிடையாது. நான் சொன்னது பற்றி தவறாக புரிந்து கொள்ளப்பட்டு செய்திகள் வெளியாகி உள்ளதால் இந்த விளக்கத்தை அளிக்கிறேன். சாக்கடை என்று வர்ணிக்கப்படும் சந்திராசாமிக்கு இணையாக கருதப்படும் ஒருவரை நான் எப்படி ஆதரிப்பேன்? எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.