அதை விடுங்க.. அதிமுக - சசிகலா இணைவதால் யாருக்கு லாபம்.. யாருக்கெல்லாம் நஷ்டம்?
சென்னை: ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு பெரும் தலைகள் மரணம் அடைந்த பிறகு நடக்கப்போகும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் வரும் சட்டமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்தலில் திமுகவிடம் இருந்து அதிமுக மிகப்பெரிய சவால்களை எதிர் கொள்ள போகிறது. அதேபோன்ற சவாலை அளிக்க வேண்டும் என அதிமுகவும் விரும்புகிறது.
ஆனால் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக உடைந்து சிதறி பின்னர் ஒன்று சேர்ந்தாலும், சசிகலா மற்றும் தினகரன் தரப்பு தனியாக இருப்பது அதிமுகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலின் போது நடந்த சட்டமன்ற தேர்தல்களில் திமுகவிடம் அதிமுக தனது கோட்டையான ஆண்டிபட்டி, பெரியகுளம், மேலூர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தோற்க அமமுக காரணமாக இருந்தது. நாடாளுமன்ற தேர்தல் பலத்த தோல்வி அடைய அதிமுக வலிமையாக இல்லாதது போன்ற தோற்றமும் காரணமாக இருந்தது.
சசிகலா அதிமுகவில் இணைகிறாரா? மழுப்பலான பதில் சொன்ன அமைச்சர் உதயகுமார்
அதிமுக - சசிகலா இணைப்பு
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவை பலப்படுத்த அதிமுக மற்றும் கூட்டணி கட்சியான பாஜக விரும்புவதாக கூறப்படுகிறது. இதற்காக பிரிந்து கிடக்கும் சசிகலா, டிடிவி தினகரனை கட்சிக்குள் சேர்க்க மத்தியஸ்தம் செய்ய முயற்சித்து வருவதாக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வருகிறது. இதை அதிமுக தரப்போ, பாஜக தரப்போ இதுவரை மறுக்கவில்லை.
சசிகலா பொதுச்செயலாளர்
இதனிடையே அதிமுக- சசிகலா இணைப்பு தொடர்பாக டிடிவி தினகரன் டெல்லி சென்றதாக தகவல்கள் வெளியாகின. டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தைகள் பலனளித்தால் சசிகலாவை விரைவில் விடுவிப்பதாக பாஜக அழுத்தம் தருவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவருக்கு ஒரு முக்கிய பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் தினகரன் கோரியதாக சொல்லப்படுகிறது.
ஒப்புக்கொள்வார்களா
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா, முதல்வராக பழனிசாமி மற்றும் துணை முதல்வராக பன்னீர்செல்வம் ஆகியோருடன் அரசாங்கம் தொடர ஏற்பாடு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சியின் அதிகாரம் சசிகலாவுக்கு செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எந்த அளவிற்கு ஒப்புக்கொள்வார்கள் என்பது காலமே விடை சொல்லும்.
திமுகவுக்கு சவால்
இதனிடையே சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலாவை ஒரு வழியாக பாஜக, அதிமுகவில் இணைத்துவிட்டால், தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும். யார் என்ன நிபந்தனை விதிக்கப்போகிறார்கள். எப்படி இணைப்பு சத்தியம் என்பது ஒருபுறம் இருந்தாலும், சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்று சேர்ந்தால், அதிமுகவில் யார் தலைமை என்பதே பெரும் கேள்வியாக உள்ளது. ஒரு வேளை இந்த நால்வர் கூட்டணி ஒன்று சேர்ந்தால் நிச்சயம் வரும் சட்டசபை தேர்தல் திமுகவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
முறியடிக்க திமுக பிளான்
சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அரசியலில் கை தேர்ந்தவர்கள் என்பதால அதை முறியடிக்க திமுக நிச்சயம் கடும் எதிர்வினையாற்றும். திமுகவின் பிரச்சார யுக்தி நிபுணரான பிரசாந்த் கிஷோர் புதிய திட்டத்தை உருவாக்க வாய்ப்பு உள்ளது. அதிமுகவின் ஒவ்வொரு அமைச்சர்களுக்கு எதிராகவும் மிகப்பெரிய ஊழல் புகார்கள் வெடிக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக கடும் போராட்டங்களை கையில் எடுக்க வாய்ப்பு உள்ளது.
புதிய ட்விஸ்ட் தரலாம்‘
இதைஎல்லாவற்றையும் தாண்டி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பாணியில் யாரும் எதிர்பார்க்காத புதிய சலுகையை இந்த தேர்தலில் திமுக அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது. இது தவிர ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பாணியில் ஒவ்வொரு கிராமத்திற்கும் முக ஸ்டாலின் சென்றுவர வாய்ப்பு உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க அதிமுக-பாஜக கூட்டணியும் கடுமையாக முயற்சி செய்யும் என்பதால் வரும் தேர்தல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. பொறுந்திருந்து பார்ப்போம். என்ன நடக்க போகிறது என்பதை. ஏனெனில் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா. என்ற பாணியில் என்ன வேண்டுமாலும் எப்போது வேண்டுமாலும் நடக்கும்.