அன்று மட்டும் அனுராதா உடனே போயிருந்தால்.. இன்று சில்க் ஸ்மிதா கேக் வெட்டி பர்த்டே கொண்டாடியிருப்பார்
சென்னை: 1980, 90களில் கனவுக் கன்னியாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவின் 60ஆவது பிறந்தாள் இன்று... 36 வயதில் அவர் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன உள்ளிட்ட பல்வேறு மர்மங்களுக்கு இதுவரை விடை தெரியவில்லை. எனினும் மற்ற நடிகைகளை போல சில்க் இருந்திருந்தால் இன்று அவர் 60ஆவது பிறந்தநாளை கொண்டாடியிருப்பார்.
சில்க் ஸ்மிதா என்றால் அனைவருக்கும் தெரிவது அவருடைய சொக்க வைக்கும் பார்வை, அவரது கொஞ்சி பேசும் மொழிதான். 80, 90 களில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினாலும் ரசிகர்களை சுண்டி இழுத்தவர்.
விஜயலட்சுமி என்ற பெண்தான் பின்னாளில் சில்க் ஸ்மிதாவாக பெயர் மாற்றப்பட்டார். அவர் ஆந்திராவில் ஒரு ஏழை தெலுங்கு குடும்பத்தில் பிறந்தவர்.
கவர்ச்சி பேரழகிதான்.. ஆனால் எத்தனை அற்புதமான ஆன்மா இவள்.. ஆச்சரியங்கள் நிறைந்த சில்க்" ஸ்மிதா!
8 வயது
குடும்ப வறுமைக் காரணமாக தனது 8 வயதிலேயே பள்ளிப்படிப்புக்கு முழுக்கு போட்டவர். பின்னர் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு திருமண வாழ்வும் இனிதாக அமையவில்லை. இதனால் தனது கொடூர கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து இருந்து சென்னைக்கு தப்பி வந்தார்.
கதாபாத்திரங்கள்
அங்கு ஒரு நடிகைக்கு டச் அப் பெண்ணாக தனது பணியை தொடர்ந்தார். அப்போதே சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அப்போது அவரை பார்த்த வினு சக்கரவர்த்தி 1979 ஆம் ஆண்டு வண்டிசக்கரம் படத்தில் ஸ்மிதா என அறிமுகம் செய்தார். அதில் சில்க் கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது.
கவர்ச்சிகரமான அழகு
இதையடுத்து அவர் சில்க் ஸ்மிதா என அழைக்கப்பட்டார். அதன் பின்னர் உட்கார கூட நேரமில்லாத அளவுக்கு சில்கிற்கு ஏகப்பட்ட படங்கள். அவரது ஆளை மயக்கும் பார்வை, கவர்ச்சிகரமான அழகு ஆகியவை அவரை அடுத்தடுத்த படங்களுக்கு கொண்டு சென்றது. இதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழி சினிமாவையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
மனைவி
வினு சக்கரவர்த்தியும் அவரது மனைவியும்தான் சில்க் ஸ்மிதாவை பார்த்துக் கொண்டனர். அவருக்கு ஆங்கிலம் கற்று கொடுக்கவைத்து, நடன வகுப்புகளில் சேர்த்துவிட்டனர். சில்க் அனைத்து தொழில் நுணுக்கங்களை கற்று தேர்ந்தவர் என அவருடன் பணியாற்றிய படத் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
கூச்ச சுபாவம்
சினிமாவில் நடிக்க எத்தனையோ வாய்ப்புகள் சில்கின் கதவை தட்டிய போதும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையாலும் சிலர் நம்ப வைத்து செய்த துரோகத்தாலும் மன உளைச்சலுக்கு ஆளானார். சில்க் கூச்ச சுபாவம் கொண்டவர் என்பதால் அவரது கஷ்டமான நேரங்களில் ஆறுதல் கூற அவருக்கு நிறைய நண்பர்கள் இல்லை.
தற்கொலை
படத்தயாரிப்பில் இறங்கி நிறைய நஷ்டமடைந்த சில்க் , தனிப்பட்ட முறையில் கஷ்டங்களை சந்தித்தார். இதனால் மிகுந்த மனஉளைச்சல் அடைந்த அவர் கடந்த 1996-ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் தனது நண்பி அனுராதாவை தொடர்பு கொண்டார்.
செப்டம்பர் 24
அப்போது தன்னை வந்து பார்த்துவிட்டு செல்லுமாறு கூறியிருந்தார். ஆனால் அனுராதாவோ அப்போது நடன இயக்குநராகவும் நடிகையாகவும் இருந்ததால் படப்பிடிப்பில் பிசியாக இருந்தார். இதனால் அடுத்த அதாவது செப்டம்பர் 24-ஆம் தேதி வந்து சந்திப்பதாக கூறியிருந்தார்.
60ஆவது பிறந்தநாள்
ஆனால் செப்டம்பர் 23-ஆம் தேதி சில்க் தற்கொலை செய்து கொண்டார். ஒரு வேளை அனுராதா அன்றைய தினமே வந்திருந்தால் அவரிடம் சில்க் தனது மனக்குறையை கூறியிருந்திருக்கலாம். அதற்கு அனுராதா நல்ல ஆலோசனைகளை கூறியிருந்திருந்தால் இன்று சில்க் ஸ்மிதா அதே குழந்தை மனதுடன் 60ஆவது பிறந்தநாளை கொண்டாடியிருப்பார். விதி யாரை விட்டது?