பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு ஜெயில்.. தமிழக அரசு எச்சரிக்கை
சென்னை: பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணையில் இரண்டு தினங்களுக்கு முன்பு பேனர் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சுபஸ்ரீ மரணத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் பேனர் விவகாரத்தில் எத்தனையோ உத்தரவுகள் பிறப்பித்தும் அதிகாரிகள் அமல்படுத்துவதில்லை என்று வேதனை தெரிவித்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் பேனர்கள், கட்-அவுட்கள் வைப்பதற்கான தடை உத்தரவை கடுமையாக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் இந்த உத்தரவை முறையாக செயல்படுத்த வலியுறுத்தி தமிழக அரசு சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளாட்சி அமைப்புகளின் நெடுஞ்சாலைகள், இணைப்பு சாலைகள், தெருக்கள் மற்றும் நடைபாதைகளில் டிஜிட்டல் பேனர் வைக்கக்கூடாது. இதுதொடர்பாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் டிஜிட்டல் பேனர் கடை உரிமையாளர்களுடன் மாவட்ட அளவில் கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. அந்த கூட்டத்தில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து எடுத்துரைக்கப்பட்டு உள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசின் அறிவுரைகளை மீறி டிஜிட்டல் பேனர் நிறுவப்பட்டால், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் சம்பந்தப்பட்டோருக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.
வாகன ஓட்டிகளை திசை திருப்பக்கூடிய மற்றும் பாதசாரிகளுக்கு தடையாக இருக்கக்கூடிய வகையில் பிரதான சாலைகளின் இருபுறங்கள், நடைபாதைகள், சாலையின் நடுப்பகுதி உள்ளிட்ட இடங்களிலும், பெரிய பெரிய வாகனங்களிலும் எந்தவொரு டிஜிட்டல் பேனரையோ, பதாகைகளையோ அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் சார்பில் வைக்கப்பட கூடாது. அனுமதியின்றி நிறுவப்படும் டிஜிட்டல் பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகளை கண்காணிக்க தவறும் அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை பாயும். இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் குழு வீதி வீதியாக சென்று பேனர் அகற்றும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் பல இடங்களில் இருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. சில பேனர்களை வைத்தவர்களே அகற்றிக்கொண்டனர்.