கூட்டணியால் பாஜக குறைவான இடங்களில் வெற்றி.. பொன்.ராதா கொடுத்த பேட்டி.. ராஜேந்திர பாலாஜி சொன்ன பதில்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டிருந்தால், இதைவிடக் கூடுதல் இடங்களில், வெற்றி பெற்றிருப்போம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். எல்லாக் கட்சிகளும் தனித்து போட்டியிட வேண்டும் என்பதுதான் அதிமுக விருப்பம் என்று அதற்கு பதிலாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு, இவ்விரு தலைவர்களும் அளித்துள்ள இந்த தனித்தனி பேட்டி என்பது அரசியல் ரீதியாக தற்போது விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருந்தது. இதில் 85 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களையும் 7 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களையும் பாஜக கைப்பற்றியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் அந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர்.. வன்முறையாளர்.. முதலை கண்ணீர் வடிக்கிறார்..எச்.ராஜா அட்டாக்
பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்த நிலையில்தான் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன் ஒருவேளை பாஜக தனித்துப் போட்டியிட்டிருந்தால் இதைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். காரணம், நாங்கள் அதிக இடங்களில் போட்டியிட்டு இருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்று தெரிவித்தார். கூட்டணியில் இடம்பெற்றிருந்ததால், தாங்கள், போட்டியிட, விரும்பிய அளவுக்கான பதவி இடங்கள் கிடைக்கவில்லை என்பது இவரது பேட்டியின் சாராம்சம். இதுகுறித்து நிருபர்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கேள்வி எழுப்பினர்.
ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி கூறுகையில், அனைத்து கட்சிகளுமே தனித்து போட்டியிட வேண்டும். திமுக கூட்டணியை தவிர்த்து, தனித்து போட்டியிட முன் வரவேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு கட்சியின் தனி பலம் தெரியவரும் என்றார். ராஜேந்திர பாலாஜி, பொன்.ராதாகிருஷ்ணனை, நேரடியாக விமர்சனம் செய்யவில்லை. அதேநேரம் திமுக கோதாவில், இறங்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருந்தார்.
கடந்த தேர்தல்
அதேநேரம், கடந்த முறை, அதாவது, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு இருந்தது. அப்போது வெறும் 31 இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற முடிந்தது. அப்படி இருந்தும் கூட இப்போது தனித்துப் போட்டியிட்டிருந்தால் அதிக தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன், வெற்றி பெற்றிருக்க முடியும் என்று எதை வைத்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறினாரோ, தெரியவில்லை.
பாஜக பலம்
ஒருவேளை 2014 ஆம் ஆண்டு முதல் மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்துள்ளதால், இப்போது தமிழகத்தில் பாஜக பலம் பெற்ற கட்சியாக உருவெடுத்து விட்டது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கருதியிருக்கக் கூடும். அல்லது கன்னியாகுமரி மாவட்டத்தில் அந்த கட்சி உள்ளாட்சித் தேர்தலில் சாதித்ததை மனதில் வைத்து இப்படி கூறியிருக்க வேண்டும் என்று தெரிகிறது.