திமுக விரும்பினால் நாடாளுமன்றம் செல்ல நான் ரெடி.. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அதிரடி!
சென்னை: திமுக விரும்பினால் நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க தான் தயார் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான தேவசகாயம் தெரிவித்துள்ளார்.
திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் அக்கட்சியின் ஆதரவாளருமான தேவசகாயத்தை ராஜ்யசபா எம்பியாக்க மக்கள் இயக்கங்களின் பிரதிநிதிகள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பேராயர் எஸ்ரா சற்குணம், வங்கி தொழிற்சங்க தலைவர் தாமஸ் பிராங்கோ ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினர். அதில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான தேவசகாயத்தை ராஜ்யசபா உறுப்பினராக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் திமுக சார்பில் இதுவரை எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான தேவசகாயம், திமுக விரும்பினால் நாடாளுமன்றத்திற்கு செல்ல நான் தயார் என்றார்.
மேலும் என்னை மாநிலங்களவை உறுப்பினர் ஆக்க திமுக முன்வந்தால் நானும் அதற்கு தயார். வாய்ப்பு கிடைத்தால் நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்கும் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்புவேன் என்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான தேவசகாயம் கூறினார்.