"செஞ்சுரி" கொடு.. "செல்பி" எடு.. கலக்கும் வைகோ.. மதிமுகவின் பலே பிளான்..!
சென்னை: வைகோ உடன் செல்பி எடுக்க வரும் மதிமுக தொண்டர்கள் 100 ரூபாய் தர வேண்டும் என்று மதிமுக தலைக்கழகம் அறிவித்திருப்பது குறித்து சமூக வலைதளங்கள் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்மையில் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். அவர் நாடாளுமன்றத்தில் அண்மை காலமாக பேசிவரும் பேச்சுகளுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆக்ரோசமாக ஒவ்வொரு விவாதத்திலும் வைகோ பேசுவது வைரலாகி வருகிறது. வைகோ உணர்ச்சிபெருக்குடன் பேசி திணறடிக்கக்கூடியவர். மிகுந்த பேச்சாற்றல் கொண்டவர் வைகோ. தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்காக போராடி வருகிறார். நீண்டகாலமாக எம்பி எம்எல்ஏ என எந்த பதவியில் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சனைக்காக போராடி வந்தார். இந்நிலையில் வைகோ அடிக்கடி மக்களை சந்தித்து பிரச்சனைகளில் கலந்து கொண்டு போராடுவார்.
100 ரூபாய் நிதி வழங்க வேண்டும்
அப்போது வைகோ உடன் செல்பி எடுக்க பலரும் விரும்புவார்கள். இந்நிலையில் மதிமுக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடன் செல்பி எடுக்க விரும்பும் மதிமுக தொண்டர்கள் குறைந்தபட்சம் ரூ.100 நிதி தர வேண்டும்.
காசு கொடுக்கலாம்
வைகோவுக்கு சால்வை அணிவிக்க விரும்பும் கட்சியினர் சால்வைக்கு பதிலாக நிதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுளளது. மேலும் மதிமுக கழகத்தில் வாழ்நாள் உறுப்பினராகப் பதிவு செய்யாதவர்கள், உடனடியாக வாழ்நாள் உறுப்பினராகப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. தலைமைக் கழகச் செயலாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் / துணை அமைப்பாளர்கள் வாழ்நாள் உறுப்பினராக ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
அறிவிப்புக்கு விமர்சனம்
மதிமுக இயக்கத்திற்கு நிதி திரட்டும் இந்த அறிவிப்பை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகிறார்கள். வைகோவிடம் இப்படி பல அரசியல் தலைவர்கள் கேட்டிருந்தால் அவர் தனது சொத்தையே எழுதி வைத்திருக்க வேண்டியதிருக்கும் என ஒருவர் கிண்டல் அடித்துளளார். இதேபோல் மற்றொருவர் உங்களோடு புகைப்படம் எடுக்க 100 அல்ல 1000 ரூபாய்யும் கொடுக்கலாம்! இது எதிர்காலத்தில் வரலாறு நினைவுகளாய் மலரும் என்று கூறியுள்ளார்.
வைகோவின் முயற்சி
இதனிடையே வைகோவின் நிதி திரட்டும் இந்த முயற்சி பெரியார் செய்த முயற்சியைப் போன்றது என்று கூறுகிறார்கள். தந்தை பெரியாரும் இப்படித்தான் நிதி வசூலிக்க சில விஷயங்களை செய்வார் என்கிறார்கள்.