பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டால்.. மற்றவர்கள் எப்படி புகார் தர முன்வருவார்கள்?
சென்னை: பாலியல் பலாத்காரத்துக்குள்பட்ட பெண்ணின் பெயரை பொதுவெளியில் கூறினால் பாதிப்புக்குள்ளான மற்ற பெண்கள் எப்படி வெளியே தைரியமாக வர முடியும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
200-க்கும் மேற்பட்ட பெண்களை பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாக வீடியோ ஆதாரம் வெளியானது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதுதொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஒரு மாணவி மட்டுமே புகார் கூறியுள்ளார். சுமார் 7 ஆண்டுகளாக இந்த நெட்வொர்க் இதுபோன்ற பலாத்காரங்களை செய்து பெண்களை மிரட்டி வருகிறது. இந்த கும்பலால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
'பார் நாகராஜ்' பின்னணியில் யார்.. அவசர நீக்கம் ஏன்.. ஒன்னுமே புரியலையே.. குழம்பும் பொதுமக்கள்!
பாதிப்பு
இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட எஸ்பி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பொது வெளியில் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது போல் பாலியல் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள், சிறுமிகள் ஆகியோரின் அடையாளம், பெயர், குடும்பம் குறித்த தகவல்கள் மறைக்கப்பட வேண்டும் என்றே சட்டம் சொல்கிறது.
கோரிக்கை
இப்படியிருக்கும் போது பொது வெளியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை குறிப்பிட்டது மட்டுமல்லாமல் இது போல் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் தாராளமாக புகார் கொடுக்க முன்வரலாம் என்று போலீஸார் கோரிக்கை வைக்கின்றனர்.
அச்சுறுத்தல்
இதுகுறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் கூறிவிட்டு புகார் கொடுக்க வாருங்கள் என்றால் யார் வருவார்கள். சட்டத்தை காவல் துறை மீறலாமா. அதுவும் ஒரு முறை என்றால் வாய் தவறி என்று நினைக்கலாம். ஆனால் பல முறை அந்த பெண்ணின் பெயரை கூறுகிறார்கள் என்றால் இது மற்ற பெண்களை மறைமுகமாக அச்சுறுத்தும் செயலாகவே பார்க்கிறோம்.
சூனியம்
இது போல் புகாரை கொடுத்துவிட்டு பொது வெளியில் அசிங்கப்படுவதற்கு பேசாமல் இருந்து விடலாம் என்றுதானே நினைக்கத் தோன்றும். திருமணம் ஆகாத பெண் என்றால் பரவாயில்லை (திருமணம் செய்து கொள்வார் என்பதால் அதுவும் தவறுதான்). இதே திருமணம் ஆன பெண்ணாக இருந்து அவரது பெயரை கூறினால் அந்த பெண்ணின் வாழ்க்கை மீண்டும் சூனியமாகாதா.
மிரட்டல்
பெண்ணின் பெயர் கூறிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே கருத்தைதான் நேற்று கமல்ஹாசனும், கனிமொழியும் வலியுறுத்தினர். பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த கனிமொழி பேசுகையில் பெண்ணின் பெயரை கூறியதன் மூலம் புகார் கொடுத்தால் இதுதான் கதி என மறைமுகமாக மிரட்டுகிறார்களா என கேள்வி எழுப்பினார்.