ரஜினியின் பேச்சை கவனித்தால்.. திருப்பம் வருமா. .வராதா.. வந்தா யாருக்கு சிக்கல்?
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்பது குறித்தே இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தில் பேசிய ரஜினி, அரசியல் கட்சி தொடங்குது குறித்து விரைவில் முடிவை அறிவிப்பதாக கூறியிருக்கிறார். அத்துடன் தன்னுடன் இருந்தால் மக்களுக்கு உழைக்க வேண்டியதிருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
இந்த கூற்றின்படி பார்த்தால் இன்னமும் ரஜினி அரசியலுக்கு வருவதில் விருப்பம் இருந்தும் தயங்கியபடிதான் இருக்கிறார் என்றே கருத முடிகிறது. அவர் இப்போது ஆலோசனையின் முக்கிய நோக்கம் தொண்டர்களின் மனநிலை என்ன என்பதை அறியவேண்டும் என்பதாகவே இருந்துள்ளது.
முன்னதாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார். அவர் அரசியலை விட்டே போய்விட்டார். அதனால் தான் அவர் டுவிட்டரில் உடல் நலம் குறித்து கருத்த பதிவிட்டார் என்று கூறினார்கள்.
என் முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன்: ரஜினிகாந்த்
போஸ்டர்
இப்படி சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்கள் பரப்பிய கருத்துக்கு ரஜினி எந்த பதிலும் அளிக்காமல் அமைதியாகவே இருந்தார். ரஜினி அமைதி காரணமாக அரசியல் வருகைக்கு வாய்ப்பு இல்லையோ என்று ரசிகர்களும் வேதனையில் போஸ்டர் ஒட்ட தொடங்கினர். ஆனால் எதற்கும் அவர் பதில் அளிக்கவில்லை.
உழைக்க வேண்டும்
ஆனால் அவர் டுவிட்டரில் கூறியடி மன்ற நிர்வாகிகளை அழைத்து அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்பது குறித்து சென்னையில் இன்று ஆலோசனை நடத்தினார். 38 மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் அவரது உடல் நிலை குறித்தும், அரசியலுக்கு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மன்ற நிர்வாகிகளை எச்சரித்த ரஜினி, என்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது. என் பின்னால் வந்தால் மக்களுக்காக உழைக்க வேண்டியதிருக்கும் என்றார்.
பெயருக்கு களங்கம்
அத்துடன் பலமுறை எச்சரித்தும் சில நிர்வாகிகள் தன் பேச்சை மதிக்கவில்லை என்று வேதனை தெரிவித்த அவர், மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்றும், என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் செயல்படுகின்றனர்- அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்றும் கூறியிருக்கிறார்.
என்ன பின்னணி
ரஜினியின் பேச்சுக்களை கவனித்து பார்த்தால் அவர் அரசியலுக்கு வருவதில் முழு மனதுடன் இல்லை என்பது தெளிவாகிறது. இதற்காகவே அவர் தட்டிக் கழிப்பது போல பேசுவதாகவும் கருதப்பட வேண்டியுள்ளது. ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழக அரசியலில் என்ன மாதிரியான திருப்பம் வரலாம் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. தனி கட்சி ஆரம்பித்து அதிமுக பாஜக கூட்டணியில் இணைவாரா அல்லது தனியாகவே போட்டியிடுவாரா என்ற கேள்வி உள்ளது.
அதிமுக கூட்டணி
பாஜக, அதிமுக கூட்டணியில் ரஜினி இணைந்தால் அது பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும். திமுகவுக்கு இன்னும் சவாலை அதிகரிக்கும். அதேபோல் தனித்து போட்டியிட்டாலும் அது திமுகவுக்கே பின்னடைவை அதிகரிக்கும். ஏனெனில் பொதுவாக ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை எதிர்த்து போட்டியிடுபவர்களுக்கு பலவாறு பிரியும் என்பது தான் காரணம்.
அதிரடியாக கிளம்புவாரா
ஆனால் எல்லாமே ரஜினி எப்படி வரப் போகிறார் என்பதில்தான் உள்ளது. அவரே தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்து, காலதாமதம் செய்யால் அதிரடியாக கிளம்பி வந்தால் மட்டுமே திமுகவுக்கு பாதிப்பு வரும். அப்படி இல்லாமல் தொடர்ந்து நழுவியபடி ஏனோதானோ என்று வந்தால் பாதிப்பு திமுகவுக்கு அல்ல.. மாறாக ரஜினிக்குத்தான் டேமேஜ் அதிகமாக இருக்கும்!