ரஜினி சார் அரசியலுக்கு வந்திருக்கனும்.. மற்ற நடிகர்களுக்கு நல்ல "பாடம்" கிடைத்திருக்கும்!!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தாம் பேசிய ஆன்மீக அரசியலை தூக்கிக் கொண்டு தேர்தல் களத்துக்கு வந்து மக்களிடம் பாடத்தை கற்று அதை வருங்கால முதல்வர் கனவில் மிதக்கின்ற நடிகர்களுக்கும் கொடுத்திருக்க வேண்டும்.. நல்ல வரலாற்று வாய்ப்பை இப்போது ரஜினிகாந்த் தவறவிட்டுவிட்டார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
பேரறிஞர் அண்ணா காலம் முதலே தமிழகத்தில் திரைத்துறையும் அரசியலும் பிரிக்க முடியாதது. அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், எஸ்.எஸ்.ஆர்., சிவாஜி கணேசன் அனைவரும் நடிக்கும் போதே மக்களின் அரசியலை பேசினார்கள்.. மக்களின் அரசியலில் பங்கெடுத்தார்கள்.. அரசியலின் ஒரு அங்கமாக சினிமா துறையை பயன்படுத்தினார்கள்.
சினிமாவிலும் அவர்கள் கோலோச்சிய பின்னர் காலச் சூழலில்தான் அரசியல் அதிகாரத்துக்கு அடுத்தடுத்து வந்தார்கள். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்றவர்கள் 4 படத்தில் நடித்துவிட்டு முதல்வர் நாற்காலி காத்திருக்கிறது என ஜம்பம் பேசிக் கொண்டிருக்கவில்லை.
கட்சி தொடங்க மாட்டேன்.. மக்களிடம் மன்னிப்பு கேட்டு ரஜினிகாந்த் அறிக்கை!
எம்ஜிஆர், சிவாஜி
திமுகவில் பொருளாளராக இருந்த நிலையில் உட்கட்சி விவகாரம் உள்ளிட்ட நெருக்கடிகளால் தனிக்கட்சி தொடங்கினார் எம்ஜிஆர். திராவிட இயக்கத்தலைவர்களோடு இணைந்து செயல்பட முடியாத காரணத்தால் தேசிய கட்சிக்கு போனார் சிவாஜி கணேசன். அவர்களுக்கு நீண்ட நெடிய அரசியல் வரலாறுகள் உண்டு. இதை எல்லாம் சில நடிக மேதைகள் எளிதாக புறந்தள்ளிவிட்டு நானும் எம்ஜிஆர் போல கட்சி தொடங்குவேன்; ஆட்சியை பிடிச்சுடுவேன் என இப்போதும் பேசி வருகின்றனர்.
ரஜினியின் ஆன்மீக அரசியல்
இப்படியே பம்மாத்து காட்டியவர்களில் முக்கியமானவர்தான் நடிகர் ரஜினிகாந்த். அதுவும் கட்சியே தொடங்காமல் ஆட்சியை பிடிச்சுருவேன்; எம்ஜிஆர் ஆட்சியை தந்துருவேன் என்றெல்லாம் ஏகத்துக்கும் வசனம் பேசினார். அப்படி பேசிய ரஜினிகாந்த் முன்வைத்தது என்ன தமிழ் மக்களுக்கான அரசியலா? தமிழர்களை முகம் சுளிக்க வைக்கிற புரியாத ஆன்மீக அரசியல் அல்லவா ரஜினிகாந்த் முன்வைத்தார்.
ரஜினி அரசியல் யாருக்கானது?
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் மண்தான் இது. சமூக நீதிக்கான தாய்நிலம் இந்த மண். இங்கே கோவில்களும் உண்டு. பல கோடிப்பேர் பக்த பெருந்தகைகள்தான். ஆனாலும் ரஜினியின் ஆன்மீக அரசியல் என்பது கேலிப்பொருளாகத்தான் பார்க்கப்பட்டது. ஏனெனில் ரஜினிகாந்த் யாருக்கோ தூண்டிலாக விட்டில் பூச்சியாகத்தான் பேசினார்.. சீறினார்.. திட்டம் போட்டார்.
தேர்தலுக்கு வந்திருக்கனும்
இதனால்தான் ரஜினிகாந்தையும் அவரது ஆன்மீக அரசியலையும் ஒருவித அசூயையுடன் தமிழக மக்கள் எக்காளத்துடன் பார்த்தனர். இந்த ஆன்மீக அரசியலைத் தூக்கிக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும் ரஜினிகாந்த். அப்போதுதான் தமிழக மக்கள் எப்படியான பாடம் கொடுப்பார்கள் என ரஜினிக்கும் புரிந்திருக்கும். நடிகர் திலகமாக திகழ்ந்த சிவாஜி கணேசனுக்கே அரசியலில் இடம் கிடையாது என குட்பை சொன்ன பூமி தமிழர் நிலம் என்பதை ரஜினிகாந்த் உள்ளிட்ட எல்லா நடிகர்களும் வசதியாக மறந்துவிடுகின்றனர்.
நடிகர்களுக்கு பாடம்
ரஜினிகாந்த் இப்போது அரசியலுக்கு நான் வரவில்லை என கூறி இருப்பது நிச்சயம் பெரும் ஏமாற்றம்தான். அவர் தேர்தல் அரசியல்கோதாவில் குதித்து பெரும் பாடத்தை பெற்றிருக்க வேண்டும். அந்த பாடம்தான் 4 படங்களில் நடித்துவிட்டாலே நானே சிஎம்; நானே முதல்வர் என நப்பாசையாக நாக்கை தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் சுள்ளான் நடிகர்களுக்கு தக்க பாலபாடமாகவும் இருந்திருக்கும். அந்த வகையில் நிச்சயம் பெரும் ஏமாற்றமாகிவிட்டதே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.