சசிகலா வந்தால் ஹேப்பிதான்.. திரியை கொளுத்தி போட்ட ராஜேந்திர பாலாஜி... சந்தேகமா இருக்கே!
சசிகலா வெளியே வந்தால் மகிழ்ச்சிதான் என்று ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்
Recommended Video
சென்னை: சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் ஹேப்பிதான் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சொல்லி உள்ளது ஏகப்பட்ட சந்தேகத்தை கிளப்பி உள்ளது.
2017 ஜுன் 7-ம் தேதி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில், "டிடிவி தினகரனை எம்எல்ஏ-க்கள் சந்திப்பதில் தவறில்லை. அவர்கள் துணைப் பொதுச்செயலாளரைத்தானே பார்த்தார்கள். வேறு யாரையும் அவர்கள் பார்க்கவில்லையே.
நேரம் கிடைக்கும்போது, அனைவரும் தினகரனைப் பார்ப்போம். எங்களுடைய பொதுச் செயலாளர், சசிகலாதான். கட்சியில் பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லை. இரு அணிகள் இணைய வாய்ப்புள்ளது" என்று சொன்னார்.
டிடிவி தினகரன்
2019 ஏப்ரல் 15-ம் தேதி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில்,"யார் பக்கம் தொண்டர்கள் உள்ளார்கள். யார் பக்கம் குண்டர்கள் உள்ளார்கள் என்பது வாக்கு எண்ணிக்கை நாள் அன்று தெரியும். துணைப் பொதுச்செயலாளரான தினகரன், தேர்தல் பிரசாரத்தில் சசிகலா பெயரையே பயன்படுத்தவில்லை. சிறையில் உள்ள சசிகலாவை வெளியே கொண்டுவர தினகரன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சுயநலத்தோடு செயல்பட்டு வருகிறார்.
எண்ணம்
கட்சியினரை அவர் ஏமாற்றி அரசியல் நடத்திவருகிறார். சசிகலா சிறைக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதுதான் தினகரனின் எண்ணம். எந்த கட்சியாக இருந்தாலும், தான் தலைவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் தினகரன்'' என்றார்.
ஏமாற்றம்
2019 ஜூலை 22-தேதி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில், அதாவது நேற்று, "டிடிவி தினகரன், சசிகலாவை சிறை தண்டனையிலிருந்து சட்ட ரீதியாக வெளியில் கொண்டு வந்தால் அது மகிழ்ச்சிதான். அப்படியே வெளிவந்தாலும் ஆட்சியில் எந்த மாற்றமும் இருக்காது. ஏமாற்றமே மிஞ்சும்" என்று தெரிவித்துள்ளார்.
அபிமானம்
அமைச்சர் பேசிய இந்த 3 பேட்டிகளிலுமே ஒரு அக்கறை கண்ணில் பட்டு மறைகிறது. சசிகலாவின் மீதான அபிமானமும், அக்கறையும் இன்னமும் அமைச்சருக்கு உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் டிடிவி தினகரனை திட்டும்போதெல்லாம் அவரது ஆதங்கம் புலப்படுகிறது.
மூத்த அமைச்சர்கள்
இன்னும் கொஞ்ச நாளில் சசிகலா வெளியே வந்துவிடுவார் என்ற பேச்சு எழுந்துள்ளது. ஒருவேளை அவர் வெளியே வந்தால், அதிமுகவில் உள்ள அன்றைய அவரது ஆதரவாளர்கள், அமைச்சர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சசிகலாவிடம் பழைய பாசத்தை மூத்த அமைச்சர்கள் காட்டுவார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
அமமுக
அதே நேரத்தில், 3 வருடத்துக்கு பிறகு தற்போது அதிமுக பலம் வாய்ந்துள்ளதாலும், அமமுக பல்லை பிடுங்கிவிட்ட பாம்பாக நெளிந்து கிடப்பதாலும், ஒருவேளை சசிகலாவை கண்டுகொள்ளாமல் இவர்கள் இருப்பார்களா என்றும் தெரியவில்லை.
கவலை இல்லை?
"சசிகலா வெளியே வந்தால் மகிழ்ச்சிதான்" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொல்லி உள்ளது, உண்மையான மகிழ்ச்சியா அல்லது சசிகலா வெளியே வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை என்ற அசாத்திய தைரியமா என்பது விளங்கவே இல்லை. எதுவானாலும் சசிகலா வெளியே வந்தபிறகுதான் இவர்களின் உண்மையான நிலைப்பாடு தெரியவரும்!