செந்தில் பாலாஜியே கிளம்பி விட்டார்.. என்னாக போகிறது அமமுக??
அமமுக உறுப்பினர்கள் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதா?
Recommended Video
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வெளியேற்றத்தால் நிச்சயம் அமமுக பாதிப்பை சந்திக்கும் என்றே சொல்லப்படுகிறது. காரணம், செந்தில் பாலாஜி பல வகையிலும் அமமுகவுக்கு உறுதுணையாக இருந்தவர்.
செந்தில் பாலாஜி முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர். 2011-ம் ஆண்டு சட்டசபையில் ஒரு மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது, முந்தையை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த நேரு இவ்வளவு ஊழல்களை செய்திருக்கிறார் என்று புட்டு புட்டு வைத்தார்.
ஆனால் ஊழல் புகார்களை அடுக்கி கொண்டே சென்ற செந்தில் பாலாஜி மீதே புகார்கள் எழுந்தன. கண்ணாடி வீட்டில் கல்லெறிந்த கதையானது. 2015-ல் பதவி பறிக்கப்பட்டது. வழக்குகள் தொடுக்கப்பட்டன. பின்னர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரனுடன் கை கோர்த்தார்.
மாஸ் கூட்டம்.. பஸ்ஸில் வந்த 1500 பேர்.. திமுகவில் இணையும் செந்தில்பாலாஜியின் பெரும் படை!
முன்னாள் அமைச்சர் நேரு
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் செந்தில் பாலாஜி திமுக பக்கம் சாய்ந்துள்ளார். ஆரம்பத்தில் அவர் திமுகவில்தான் இருந்தார். பின்னர் மதிமுகவுக்குப் போனார். அதன் பிறகு அதிமுக பக்கம் வந்தார். தற்போது மீண்டும் திமுகவுக்கேத் திரும்புகிறார். விஷயம் என்னவென்றால், செந்தில் பாலாஜியை திமுக பக்கம் இழுத்து வந்ததே முன்னாள் அமைச்சர் நேருதான் என்கிறார்கள்.
பசையுடன் உள்ளார்
திமுகவில் செந்தில்பாலாஜி இணைவதால் கரூர் மாவட்டம் பலப்படும் என்று திமுக நினைக்கிறதா என தெரியவில்லை. ஆனால் பலப்படும் வாய்ப்புள்ளது. காரணம், கரூரைப் பொறுத்தவரை செந்தில் பாலாஜிதான் இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறார். அது திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுகவாக இருந்தாலும் சரி, அமமுகவாக இருந்தாலும் சரி. செந்தில் பாலாஜியின் செல்வாக்கு இன்னும் சரியவில்லை. பசையுடன்தான் இருக்கிறார்.
உத்தரவாதம் என்ன?
டிடிவி தினகரனின் வலது கரம் என்று சொல்லப்பட்டவர் செந்தில் பாலாஜி. அவரே இப்போது திமுகவுக்கு செல்கிறார் என்றால் அமமுகவின் உண்மையான நிலை இப்போது எப்படி உள்ளது? அங்கிருக்கும் மற்ற 17 எம்எல்ஏக்களின் நிலைக்கு உத்தரவாதம் என்ன என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
கைகள்
தங்கத் தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட சிலர் தினகரனுக்கு தீவிர ஆதரவாளர்களாக இருப்பவர்கள். ஆனால் எல்லோரும் தீவிரமான ஆதரவாளர்கள் என்று கூற முடியுமா எனத் தெரியவில்லை. வலுவுள்ள கைகள் பிடித்து இழுத்தால் இவர்களில் பலர் முகாம் தாவும் மன நிலையில் இருக்க கூடியவர்கள் என்றுதான் கருதப்படுகிறது.
அதிமுக அறைகூவல்
இதை வைத்து அமமுக கூடாரம் காலியாகி விடும் என கூற முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் ஆட்டம் ஏற்படும். அதை சரி செய்யும் பொறுப்பு தினகரன் கையில்தான் உள்ளது. ஒரு பக்கம் அதிமுக பச்சையாகவே கூவி கூவி கூப்பிட்டுக் கொண்டிருக்கிறது.
அமமுக எதிர்காலம்?
அதிமுகவுக்குத் திரும்பினால் நிச்சயம் பசையான கவனிப்பு இருக்கும் என்பதால் தினகரனுடன் இருப்பவர்கள் படை படையாக கிளம்பினால் அமமுகவின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி விடும். மறுபக்கம் திமுகவும் விடாது. எனவே செந்தில் பாலாஜி செய்தியை சாதாரண கட்சித் தாவலாக கருதாமல், சீரியஸாக எடுத்துக் கொண்டு உருப்படியான வேலைகளில் தினகரன் இறங்கினால் மட்டுமே அமமுகவை மேலும் சீர்குலையாமல் காக்க முடியும் என்று சொல்கிறார்கள்.