ஈரோடு கிழக்கில் பாஜகவிற்கு டெபாசிட் கிடைக்காது.. பின்வாங்குறது ஏன்னு புரியுதா: அமைச்சர் மனோ தங்கராஜ்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்று அண்ணாமலை கூறி வருகிறார் என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்தார்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை பாஜக போட்டியிட்டால் அக்கட்சிக்கு டெபாசிட் கூட கிடைக்காது. அதனால்தான் அங்கு போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்று அண்ணாமலை கூறி வருகிறர். ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாஜக ஆட்சிக்கு வந்தால் அறநிலையத்துறை தனியார் மூலம் செயல்படுத்துவோம் என்று அண்ணாமலை கூறுவது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது. தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை சிறப்பான பணிகளை செய்து வருகிறது.
இதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் அரசின் கட்டுப்பாட்டில் தான் கோவில்கள் உள்ளது. கோவில்கள் தனியார் வசம் சென்றால் நிர்வாக பிரச்சினைகள் ஏற்பட்டு ஒரு தரப்புக்கான ஆலயங்களாக செயல்படும் நிலை உள்ளது. இது எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்றால் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தான் ஆலயங்கள் இருக்க வேண்டும்.
அதிமுக பிரிந்த கூடை.. திரிந்த பால்.. டீ, காபிகூட போட முடியாது! அமைச்சர் மனோ தங்கராஜின் கலாய் கவிதை
நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக
அனைத்து தரப்புக்கும் ஆலயங்கள் பொதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே அறநிலையத்துறை அமைக்கப்பட்டது. அற நிலையத்துறை செயல்பாடு தெரியாதவர்கள் தான் இவ்வாறு பேசுகின்றனார். தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் கும்பாபிஷேகங்கள் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. மக்கள் மத்தியில் இது நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க கூடியவர்கள் தான் தேவையில்லாத கருத்துக்களை கூறி வருகின்றனர்.
டெபாசிட் கூட கிடைக்காது
பாஜக ஒருபோதும் உண்மை பேசுவதில்லை. குஜராத்திற்கு ஒரு நியாயம் தமிழ்நாட்டிற்கு ஒரு நியாயம் என்று தான் அக்கட்சி பேசும். பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் ஏன் அறநிலையத்துறை தனியார் கையில் கொடுக்கப்படவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை பாஜக போட்டியிட்டால் அக்கட்சிக்கு டெபாசிட் கூட கிடைக்காது. அதனால்தான் அங்கு போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்று அண்ணாமலை கூறி வருகிறர்.
பாஜக ஓடி ஒளிவதை பார்க்கும்போது..
ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. பிபிசி ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. பாஜக உண்மையிலேயே நேர்மையாக இருந்தால் அந்த ஆவணப்படத்தை எந்த தடையும் விதிக்காமல் வெளியிட வைத்து அதன் மீது ஆரோக்கியமான விவாதத்தை ஆரம்பித்து இருக்க வேண்டும். அது உண்மையா ? தவறா? என்பதை அவர்கள் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்த தைரியம் பாஜகவுக்கு இல்லை. பாஜக ஓடி ஒளிவதை பார்க்கும் போது எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லும் பழமொழியை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் உள்ளது.
ஆளுநர் பேசுவதில்லை
ஆளுநர் தனது தவறுதலுக்கு மன்னிப்பு தெரிவித்து விட்டார். தற்போது அமைதியாக சென்று கொண்டிருக்கிறார். தமிழ்நாடு வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். தற்போது அதை கை விட்டு விட்டார். சனாதனம் குறித்தும் தற்போது ஆளுநர் பேசுவதில்லை. அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. எனினும் உச்சபட்ச பதவியில் இருப்பவர்கள் அந்த வரைமுறைக்கு உட்பட்டு அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு பேசுவது அவர்களது பதவிக்கு அழகாகும்" என்றார்.