69% ஒதுக்கீட்டிற்கு பங்கம் வராமல் புதிய திட்டத்தை செயல்படுத்தினால் ஏன் ஏற்க கூடாது.? தமிழிசை
சென்னை: நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க தமிழக துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம் மற்றும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக, காங்கிரஸ் உட்பட 21 அரசியல் கட்சிகள் பங்கேற்றுள்ளன.
இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், மத்திய அரசின் புதிய சட்டம் இடஒதுக்கீட்டு கொள்கையை நீர்த்து போக செய்து விடும். எனவே மத்திய அரசின் புதிய சட்டத்தை தமிழக அரசு அனுமதிகக் கூடாது என வலியுறுத்தினார்.
இந்நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 10% இடஒதுக்கீட்டை செயல்படுத்தினால் தமிழகத்திற்கு கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்கும்.
ஏற்கனவே உள்ள இடஒதுக்கீடு முறை பாதிக்காமல் இந்த இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த, மருத்துவ கல்வி ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே 15 % இடஒதுக்கீடு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் புதிய இடஒதுக்கீட்டு சட்டத்தை செயல்படுத்தினால், கூடுதலாக 1,000 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் தமிழகத்திற்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதன்மூலம் தமிழக அரசுக்கு இந்திய ஒதுக்கீட்டிற்கான இடங்கள் போக, 850 இடங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். மத்திய அரசின் திட்டத்தை எதிர்க்கும் கட்சியினர், இந்த உண்மை நிலவரத்தை எண்ணி பார்த்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்றார்.
பின்னர் அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை, 10 சதவீத இடஒதுக்கீடு உயர் சாதியினருக்கானது என கருதி விட கூடாது. உயர் வகுப்பு ஏழைகளுக்கு இடஒதுக்கீடு அளிப்பது, சமூக நீதிக்கு எதிரானது என பிற கட்சியினர் கூற கூடாது என வலியுறுத்தினார்.
நலிந்த முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தினால், தமிழகத்திற்கு தான் நன்மை கிடைக்கும். கூடுதலாக மருத்துவ இடங்கள் கிடைத்தால் நல்லது தானே. மாநிலத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு பங்கம் வராமல், 10 சதவீத ஒதுக்கீட்டை செயல்படுத்தினால் ஏன் ஏற்க கூடாது என வினவினார்.
10 சதவீத இடஒதுக்கீடு என்பது ஏற்றத்திற்கான திட்டமே அன்றி, ஏமாற்றத்திற்கான திட்டம் அல்ல என உறுதிபட கூறினார்.