ஆ.ராசாவின் ஒத்த பேட்டி.. ஓரளவுக்கு பிக்சர் கிளியரா தெரியுது பாருங்க!
திமுக கூட்டணிக்கு டிடிவி, கமல் வந்தால் வரவேற்போம் என்று ஆ.ராசா கூறினார்.
சென்னை: அப்படின்னா... இவ்வளவு நாள் அதிமுக சொன்னதெல்லாம் உண்மைதானோ?
திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா ஒரு தனியார் தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
அதில், "எங்கள் நோக்கம் பிஜேபி, அதிமுகவை வீழ்த்துவதுதான். இதற்கு திமுக ஒன்றே போதும். ஒருவேளை கூட்டணிக்கு எங்களுடன் யாராவது வந்தால், அவர்களையும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வலியுறுத்துவோம்.
சுயமரியாதை
இதை ஏத்துக்கறதும், ஏத்துக்காததும் அவர்கள் இஷ்டம். நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது. கமல் வந்தால் வரவேற்போம், அதேபோல டிடிவி வந்தாலும் வரவேற்போம். ஆனால் பாமக, தேமுதிகவை அழைப்பது எங்கள் சுயமரியாதைக்கு இழுக்கு. அவர்களை கூப்பிட்டு எங்கள் சுயமரியாதையை இழக்க தயாரில்லை" என்றார்.
ரகசிய கூட்டு?
ஆ.ராசாவின் இந்த பேச்சில் 2 விஷயம் தெளிவாக தெரிகிறது. ஒன்று, ஏற்கனவே டிடிவியும், ஸ்டாலினும் ஒன்று சேர்ந்துகொண்டு எல்லா வேலைகளையும் பார்த்து வருகிறார்கள், அவர்களுக்குள் ரகசிய கூட்டணி உள்ளது என்று அதிமுகவில் எல்லா அமைச்சர்களும் சொல்லி வருகிறார்கள்.
ஒரே ஹோட்டல்
போதாக்குறைக்கு முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையில் பங்கேற்பதற்காக மதுரை சென்றிருந்த ஸ்டாலினும், டிடிவி தினகரனும் ஒரே ஓட்டலில் தங்கியதாகவும், இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் அதிமுக நாளேட்டில் செய்தி வெளியானதும் இன்னும் விஷயம் பரபரப்பானது.
உடனே சதியா?
இதற்கு துரைமுருகனும் கோபப்பட்டு, "தமிழ்நாட்டு அரசியல் இப்படி போய்விட்டதே என்று ரொம்ப வருத்தப்படுகிறேன். ஒரு எதிர்க்கட்சி தலைவரோ அல்லது வேறு கட்சி தலைவரோ ஒரே விமானத்தில் போகக்கூடாதா? ஓட்டலில் கூட தங்கக்கூடாதா? உடனே சதியா?" என்று கொதித்து போய் கேட்டார். இந்த நிலையில் டிடிவியை ஆ.ராசா கூட்டணிக்கு வந்தால் அழைப்போம் என்று சொல்லியுள்ளது எங்கேயோ இடிப்பதாகவே உள்ளது.
கூட்டணி இல்லை
அதேபோல மற்றொரு விஷயம், "இந்த முறை கூட்டணி அமைத்தே போட்டியிடும்" என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியிருந்தார். ஆனால் ஆ.ராசாவோ, அவர்களை கூப்பிட்டு சுயமரியாதை இழக்கவில்லை என்று சொல்லிவிட்டார். அப்படியானால் பாமகவுக்கு திமுகவுடன் கூட்டணி இல்லை என்பதும் தெளிவாகி உள்ளது.