ட்விஸ்ட்.. வசந்தகுமார் வெற்றி பெற்றால் எந்த தொகுதியை ராஜினாமா செய்வார்? 'அந்த' ரிசல்ட்டும் முக்கியம்
Recommended Video
சென்னை: நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் கன்னியாகுமரி தொகுதி லோக்சபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுவதால், நாங்குநேரி தொகுதி கதி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களைவிட கன்னியாகுமரி மாவட்டம் வேறுபட்டது. இங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய தேசியக் கட்சிகளுக்குத்தான் அதிகப்படியான வாக்கு வங்கி உள்ளது.
எனவேதான், பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் நடுவேயான போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
"இந்த" இரு தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக நேரடியாக மல்லுக்கட்டு!.. போட்டி பலமா இருக்கும் போலயே
தனித்து போட்டி
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த லோக்சபா தேர்தலில் 3,72,906 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றார். 2வது இடம் பிடித்தது, வசந்தகுமார்தான். அவர் பெற்றர வாக்குகள், 2,44,244. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அப்போது திமுக, காங்கிரஸ் தனித்துக் களம் கண்டன. எனவே வாக்குகள் இரண்டாக பிரிந்தன. திமுக வேட்பாளர் ராஜரத்தினம் பெற்ற ஓட்டுக்கள், 1,17,933.
மீனவர்கள் எதிர்ப்பு
இப்போது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியுடன், வசந்தகுமார் களமிறங்குகிறார். பாஜகவும் அதிமுக கூட்டணியுடன்தான் களமிறங்குகிறது. ஆனால், மத்தியிலும், மாநிலத்திலும், இரண்டுமே ஆளும் கட்சிகள் என்பதால் எழும் இயல்பான எதிர்ப்பு அலை மற்றும், தொகுதியில் கணிசமாக உள்ள மீனவர்கள், இணையம் துறைமுகம் திட்டம் போன்றவற்றை எதிர்ப்பது, ஒக்கி புயல் பாதிப்பின்போது, மத்திய அரசு மீட்பு பணியில் மெத்தனம் காட்டியது, போன்றவை பாஜக கூட்டணிக்கு எதிராக போகக்கூடும்.
சமூக வாக்குகள்
கன்னியாகுமரி தொகுதியில் எண்ணிக்கை அடிப்படையில், முதலிடத்தில் இருப்பது நாடார் ஜாதியினர்தான். அவர்கள்தான் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். பொன்.ராதாகிருஷ்ணனைப்போலவே, வசந்தகுமாரும் நாடார் சமுதாயத்தில் பிரபலமானவர். சமூகத்திற்காக பல்வேறு உதவிகளை செய்துள்ளார். எனவே நாடார்கள் ஓட்டுக்கள் இரண்டாக பிரியும். இதுவும் வசந்தகுமாருக்கு சாதகம் என்கிறார்கள்.
22 தொகுதிகள் காலி
எனவே, தேர்தலில் வசந்தகுமார் வெற்றி பெற்றால் நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும். அல்லது, லோக்சபா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். வசந்தகுமாரை பொறுத்தளவில் டெல்லி தலைமையிடம் நெருக்கத்தை விரும்புபவர். எனவே, நாங்குநேரி எம்எல்ஏ பதவியைத்தான் அவர் ராஜினாமா செய்ய வாய்ப்பு அதிகம். ஏற்கனவே பல்வேறு காரணங்களால் 22 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. அதில் 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஆக 4 தொகுதிகள் காலியாகவே தொடருகின்றன. இந்த நிலையில், நாங்குநேரி தொகுதியையும் விட்டுத்தர வேண்டியிருந்தால், காலியாகும் தொகுதிகள் எண்ணிக்கை 5ஆக உயரும்.
ரிசல்ட் முக்கியம்
இடைத் தேர்தல்களில் அதிமுக கணிசமாக வெற்றி பெற்று, பெரும்பான்மையை தக்க வைத்தால், எம்பி பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்வார். அதிமுக போதிய சீட்டுகளை வெல்லாமல் இழுபறி நீடித்தால், வசந்தகுமார் எம்எல்ஏ பதவியை விட்டுத்தர முடியாது. ஆட்சி மாற்றத்திற்கே இந்த ஒரு தொகுதி காரணமாக கூட மாறலாம். எனவே, இடைத் தேர்தல் ரிசல்ட் அடிப்படையில்தான் வசந்தகுமாரின் அடுத்தகட்ட மூவ் இருக்கும். நினைவில் கொள்க.. இவை வசந்தகுமார் வெற்றி பெற்றால் ஏற்படப்போகும் மாற்றங்கள்தான். பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றால் என்ற கேள்வி அடுத்ததாக எழும்.. வேறென்ன, வாழ்த்துக்களை சொல்லிவிட்டு அடுத்த வேலையை பார்க்க வேண்டியதுதான்!