ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்காதீர்... தீ குளிக்கவும் தயங்க மாட்டோம்... கண்ணீர் பேட்டி
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முற்பட்டால் ஆலையின் முன்பு தீ குளிப்போம் என்று துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கூறினர்.
போராட்டத்தின் போது உயிரிழந்த 14 பேரின் உறவினர்கள் சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்தனர்.
மேலும், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தேசிய பசுமை தீப்பாயம் விதித்த விதிமுறைகள்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கண்ணீர் மல்க பேட்டி
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில், நீதிமன்ற தீர்ப்பின்படி ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் தூத்துக்குடியில் மேலும் பல உயிர்கள் போகும் என்று உயிரிழந்த 14 பேரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முற்பட்டால் ஆலையின் முன்பாக தீ குளிப்போம். எங்களது உயிர் உள்ளவரை ஆலையை திறக்க விடமாட்டோம் என்றும் கண்ணீர் மல்க கூறினர்.
நினைவு சின்னம்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தியும் போராட்டங்கள் நடந்து வருவதாக சொன்னால், பொதுவாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவை வைத்து ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதா வேண்டாமா என முடிவெடுங்கள் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். சுட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அமைச்சர் பதில்
இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் அனுமதிக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி சட்டசபையில் தெரிவித்துள்ளார். மறுபுறம் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனம் பல்வேறு முயற்சி மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து சட்டப் போராட்டம் நடந்து வருகிறது.