சிறப்பா வாழ சிந்தனையில் சிக்கனம்... தேவை இக்கணம்...!
சென்னை: சிக்கனமா இருந்தா சிறப்பா வாழலாம்னு நம்ம எல்லோருக்குமே தெரியும். ஆனா நான் இப்போ சொல்லப் போறது அது பத்தி இல்லை, நாம பேசப் போற மேட்டர் "சிந்தனை சிக்கனம்". இதென்ன புது ஐயிட்டமா இருக்குன்னு நீங்க கேட்கலாம். இப்போ உலகம் முழுக்க இருக்கிற டாப் மேனேஜ்மண்ட் குருக்கள் இதைப் பத்திதான் சூடா விவாதிச்சிட்டு இருக்காங்க. அதனால அதை நாமும் காதில் வாங்கி போட்டு வைத்துக் கொள்வோம்.
முதல்ல சிக்கனத்துக்கும் கஞ்சத்தனத்துக்கும் என்ன வித்தியாசம்னு தெளிவா தெரிஞ்சிக்கணும். அப்போ தான் நாம பேசப் போற விஷயம் உங்களுக்கு முழுசா புரியும். ஒரு ஊர்ல ஒரு பெரியவர் இருந்தார். அவர்தான் ஊருக்கு தேவையான பொது விவகாரங்களை முன்னாடி நின்னு பொறுப்பா நடத்துவாராம். அவர்கிட்ட வந்த ஒருத்தர், ஐயா நம்ம ஊர் கோவில் சுவர் எல்லாம் விரிசல் விட ஆரம்பிச்சிடுச்சு. நிறைய இடத்தில் சுண்ணாம்பு காரை எல்லாம் பெயர்ந்துகிட்டு வருது. கோவிலை கொஞ்சம் புனரமைக்கணும்னு சொல்லியிருக்கார். அதுக்கு பெரியவர், அதனால் என்ன ஊர் மக்கள் எல்லார் கிட்டேயும் காசு வசூலிச்சு கோவிலை புனரமைப்போம். முதல்ல நம்ம ஊரில் இருக்கிற பரமசிவம் கிட்டே போய் கொஞ்சம் நிதி உதவி கேளுங்கன்னு சொல்லியிருக்கார். ஏன்னா பரமசிவம் தான் அந்த ஊர்லயே பெரிய பணக்காரர்.
உடனே கோவில் நிர்வாகத்தை சேர்ந்த சில பேர் பரமசிவம் வீட்டுக்கு போயிருக்காங்க. அவங்க போன நேரம் பரமசிவம், தன் வீட்டு வேலைக்காரன் ஒருத்தனை பாக்ஸர் கணக்கா மூக்கு மேலயே பங்கு... பங்குன்னு குத்திட்டு இருந்தாராம். பதறிப்போன நம்ம பார்ட்டிங்க என்னடா இது கொடுமைன்னு விசாரிச்சா, அந்த வேலைக்காரன் பருப்பு வாங்கிட்டு வரும்போது கொஞ்சம் பருப்பை கீழே ரோட்டுல சிந்தி வீணாக்கிட்டான், அதான் முதலாளி மூக்குலயே குத்துறாருன்னு சொல்லியிருக்காங்க. இதைக் கேட்டதும் கோவில் பார்ட்டிங்க சொல்லாம கொள்ளாம தப்பிச்சா போதும்னு கிளம்பி வந்துட்டாங்களாம்.
ஊர் பெரியவர் கிட்டே வந்து நடந்ததை சொல்லியிருக்காங்க. அட என்னப்பா நீங்க, போன விஷயத்தை பேசிட்டு வர வேண்டியதுதானே, மறுபடியும் போங்கன்னாராம் பெரியவர். என்னடா இது தொல்லையா போச்சேன்னு பயந்துகிட்டே மறுபடியும் பரமசிவம் வீட்டுக்கு போனாங்களாம். இப்போ சவுக்கு எடுத்து இன்னொருத்தனை வெளுவெளுன்னு வெளுத்துகிட்டு இருந்தாராம் நம்ம பரமசிவம். இதைப் பார்த்ததும் நம்ம ஆளுங்களுக்கு வெலவெலத்து போச்சு. விசாரிச்சா, அவன் சரியா கணக்கு பார்க்காம செலவு பண்ணதுல அக்கவுண்ட்ஸ்ல கொஞ்சம் இடிக்குது, அதான் முதலாளி கணக்கை சரி பண்ணிகிட்டு இருக்கார்னு சொல்லி இருக்காங்க. நம்ம ஆளுங்க மறுபடியும் எஸ்கேப்.
திரும்பவும் பெரியவர் கிட்டே போய் சொல்லி இருக்காங்க. அட என்னப்பா நீங்க, எது நடந்தாலும் பரவாயில்லை, நீங்க போய் விஷயத்தை சொல்லுங்கன்னு மறுபடியும் சொல்லி இருக்கார். அதனால மூன்றாவது முறையா பரமசிவம் வீட்டுக்கு போன ஆட்களுக்கு இந்த முறை ஒரு ஆறுதல். பரமசிவம் யாரையும் பதம் பார்க்காம நார்மலா இருந்தாராம். வந்த விஷயத்தை சொன்னதும், அடடே நல்ல விஷயமாச்சே, இந்தாங்கன்னு பட்டுன்னு பத்தாயிரம் ரூபாயை தூக்கி கொடுத்தாராம். நம்ம ஆளுங்களுக்கு ஒரே ஆச்சர்யம். என்னடா இது, பத்து பருப்பை சிந்திட்டான்னு மூக்கு மேல குத்துவிட்ட ஆளு, கேட்ட உடனே பத்தாயிரம் கட்டு எடுத்து தர்ராரேன்னு அசந்திட்டாங்களாம். இதை புரிஞ்சிகிட்ட பரமசிவம் சொன்னாராம், நான் கஞ்சன் இல்லை, சிக்கனவாதி. நான் அந்த மாதிரி எல்லாம் சிக்கனமா இருந்து சேமிக்கிறதுனாலதான் இந்த மாதிரி தேவைப்படும் இடங்கள்ள செலவு பண்ண காசு இருக்கு. அதனாலதான் சிக்கனத்துல அவ்வளவு குறியா இருக்கிறேன்னாராம்.
காசு பணத்தில் பரமசிவம் காட்டிய சிக்கனத்தை நாம நம்ம சிந்தனையில் காட்டனும்னு நிபுணர்கள் சொல்றாங்க. அதென்னங்க சிந்தனை சிக்கனம்? இன்னைக்கு நாம சந்திக்கிற பல பிரச்னைகளுக்கு நம்ம முன்னாடி இருக்கிற ஆப்ஷன்கள்தான் காரணம்னு ஒரு ஆய்வு முடிவு சொல்லுது. அரை நூற்றாண்டுக்கு முன்னாடி மனிதர்களுக்கு இருந்த ஆப்ஷன்கள் ரொம்ப குறைவு. அதனால் அவர்களால் சீக்கிரம் தெளிவான முடிவுக்கு வர முடிஞ்சுது. ஆனா இன்னைக்கு இருக்கிற மில்லினியல் கிட்ஸ் முன்னாடி ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ஆப்ஷன்கள் கொட்டிக் கிடக்கு. அதனால் அவர்களால் சீக்கிரமாகவும் முடிவுக்கு வர முடியல, தெளிவாவும் முடிவெடுக்க முடியலைன்னு கண்டுபிடிச்சிருக்காங்க.
50 வருஷத்துக்கு முன்னாடி நாம டிவி வாங்கனும்னு நினைச்சா, முதல்ல ரெண்டு ஆப்ஷன் கலர் டிவியா? பிளாக் அண்ட் வொயிட்டா? நம்ம கிட்ட இருக்கிற காசுக்கு ஏத்தபடி ஒன்றை தேர்வு செய்த பிறகும், அதில் மொத்தமே நாலு, அஞ்சு கம்பெனி டிவிதான் இருந்தது. அதனால ஈஸியா தேர்வு பண்ண முடிஞ்சுது. ஆனா இன்னைக்கு நிலைமையை நினைச்சு பாருங்க. ஃபிளாட் டிவி, பெரிய சைஸ், எல்இடி டிவி, எல்சிடி டிவி, அலெக்ஸா இருக்கிற டிவி, வாய்ஸ் கண்ட்ரோல் டிவின்னு மொத்த ஆப்ஷனையும் புரிஞ்சுகிறதுக்குள்ள மண்டை காய்ஞ்சிடும். கடைசியிலே ஏதோ ஒன்னுன்னு பெரிய சைஸ்ல இருக்கிற ஒரு டிவியை வாங்கிட்டு வந்துடறோம். மொபைல் ஃபோன் வாங்க போனாலும் இதை நிலைமைதான்.
மண்டையில மசாலா இருந்தா மரண மாஸ் காட்டலாம்!
இதாவது பரவாயில்லை தப்பான பொருளை வாங்கிவிட்டாலும் பெரிய நஷ்டம் எதுவும் இல்லை. வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதிலேயே இந்த அபரிமிதமான ஆப்ஷன்கள் ஆப்பு வெச்சிடுதாம். முன்னாடி எல்லாம் தெரிந்தவர்களிடம் சொல்லி பெண் அல்லது மாப்பிள்ளை தேடுவோம். அப்படி பார்க்கும்போது, அழகான, படித்த, குணமான, குடும்பத்தை அனுசரித்து போகிற, விட்டுக் கொடுக்கிற மனமுடைய என பெரிய பட்டியலை கையில் வைத்துக் கொண்டு பெண்ணோ, மாப்பிள்ளையோ தேடுவோம். ஆனால் இன்னைக்கு மேட்ரிமோனியல்கள் வந்த பிறகு, நம் முன் உள்ள திரையில் ஆயிரக்கணக்கான வரன்கள் விரிகின்றன. எக்கச்சக்க ஆப்ஷன்கள் இருக்கும்போது சரியானவற்றை தேர்ந்தெடுக்க முடியாமல் மனித மனம் தடுமாற ஆரம்பித்துவிடுகிறது என்கிறார்கள். முடிவு, கடைசியில் அழகு, பணம், பதவி என ஏதாவது ஒன்றை மட்டும் அளவுகோலாக வைத்து தாங்கள் ஷார்ட் லிஸ்ட் செய்யும் டாப் 5 வரன்களில் ஒன்றை தேர்ந்தெடுத்துவிடுகிறார்களாம். இப்படி நடக்கும் திருமணங்கள் பல நேரங்களில் வெற்றிகரமாக அமைவதில்லை என்கிறார்கள்.
இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கதான் "சிந்தனை சிக்கனம்" என்ற விஷயத்தை வலியுறுத்துகிறார்கள். அதாவது, நாம் ஏதேனும் ஒரு பொருளை வாங்குவதற்கு முன், நம் தேவை என்ன என்பதை ஒரு பேப்பரில் தெளிவாக எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த தேவைகளுக்கு ஏற்ற பொருட்களை மட்டும் பரிசீலனை செய்ய வேண்டும். உதாரணத்திற்கு உங்கள் தேவை 10 ஆயிரம் ரூபாயில் ஒரு ஃபோன் என்றால், அந்த விலையில் கிடைக்கும் மாடல்களை மட்டும் பரிசீலிக்க வேண்டும். அதில் பிடித்தவற்றை வாங்கிக் கொள்ள வேண்டும். இஎம்ஐயில் கிடைக்கிறது என்பதற்காக 70 ஆயிரம் ரூபாய் ஃபோனை பார்க்க கூடாது என்கிறார்கள். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருந்தால், கார்ப்பரேட்டுகள் நம் முன் விரித்து வைக்கும் பல கண்ணிவெடிகளில் கால் வைக்காமல் தப்பித்துக் கொள்ளலாம்.
அதிக ஆப்ஷன்களின் இன்னொரு ஆபத்து, நிம்மதியை தொலைப்பது. அட ஆமாங்க, நாம எவ்வளவுதான் கவனமா பார்த்து ஆயிரம் ஆப்ஷனில் சிறப்பான ஒன்றை தேர்வு செய்தாலும், நாம் தேர்ந்தெடுத்தது சிறப்பானதுதானா, ஒருவேளை அவசரப்பட்டு தவறான முடிவு எடுத்துவிட்டோமா என்றெல்லாம் மனம் குழம்ப ஆரம்பித்துவிடுமாம். இது இருக்கிற கொஞ்சம் நிம்மதியையும் கெடுத்துவிடும் என்கிறார்கள். அதிக பணம் வைத்திருப்பவர்கள் நிம்மதி இல்லாமல் அலைவதற்கு இதுவும் ஒரு காரணம்.
மொத்தத்தில், அதிக ஆப்ஷன்கள் பணத்திற்கும் வேட்டு வைத்து, மன நிம்மதியையும் கெடுத்துவிடும். எனவே எல்லாத்தையும் பார்த்து ஒரு முடிவுக்கு வருவோம் என்பதை மறந்துவிட்டு, தேவையானதை மட்டும் பார்த்து முடிவெடுப்பது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்புறம் பாருங்க, மனசும் நிம்மதியா இருக்கும், பர்ஸூம் நிம்மதியா இருக்கும்.
- கௌதம்