வெளிநடப்பு செய்யதுவிட்டு திரும்பி வரலாம்... சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 'ஷாக்' பேச்சு
சென்னை: தமிழக சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்களை பார்த்து நீங்க வெளிநடப்பு செய்துவிட்டு திரும்பி வரலாம் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்த கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தமிழக சட்டசபையின் நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார்.
தொடக்கத்தில் திமுக எம்.எல்.ஏக்களுக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் சில நிமிடங்கள் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்ற திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிமுக அரசு மீதான ஊழல் புகார்கள், 7 தமிழர் விடுதலை விவகாரம் ஆகியவற்றை ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் எழுப்பினர். அப்போது, மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பன்வாரிலால் புரோகித், திமுகவினருக்கு பதிலளித்தார்.
மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது- ஆளுநர் உரையில் தமிழக அரசு வலியுறுத்தல்
இதற்கும் திமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், என் உரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால் 5 நிமிடம் வெளிநடப்பு செய்துவிட்டு நீங்கள் திரும்ப வரலாம் என்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.
சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை பார்த்து வெளிநடப்பு செய்யலாம் என ஆளுநரே கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.