அஞ்சல் பணி தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு... காற்றில் கரைந்ததா 2019-ல் கொடுத்த உறுதிமொழி..!
சென்னை: அஞ்சல் பணி தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ள நிகழ்வு தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
அந்தந்த மாநிலங்களில் அந்த மொழிகளில் அஞ்சல் பணி தேர்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது.
தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட நிலையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் அஞ்சல் தேர்வில் இடம்பெற்றிருக்கின்றன.
அஞ்சல் பணி
அஞ்சலக கணக்கர் தேர்வு எழுதும் மொழிகளில் தமிழ் மீண்டும் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சலக கணக்கர் தேர்வு வரும் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான மொழி பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ஆங்கிலம், இந்தி மட்டுமே இடம் பெற்றுள்ளது.
மத்திய அரசு
கடந்த 2019 -ம்ஆண்டு நடைபெற்ற அஞ்சலக தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே கேள்விகள் இடம்பெற்றன. அந்தந்த மாநிலங்களில் அந்த மொழிகளில் அஞ்சல் பணி தேர்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டதை தொடர்ந்து, இனிவரும் அஞ்சலக தேர்வுகளில் ஆங்கிலம், இந்தி மொழிகளுடன் தமிழிலும் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
உறுதிமொழியை மீறி
இந்நிலையில், வரும் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற உள்ள அஞ்சலக கணக்கர் தேர்வுக்கு, தமிழ் மொழி மீண்டும் புறக்கணிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு கொடுத்த உறுதிமொழியை அமல்படுத்துவதற்கு பதில் அதற்கு மாறாக நடைமுறை செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.
கிராமப்புற இளைஞர்கள்
போட்டி தேர்வுகளில் ஒரு மாநிலத்தின் மொழி புறக்கணிக்கப்பட்டால், கிராமப்புற இளைஞர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை புரிதல் கூட மத்திய அரசுக்கு இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.தமிழகத்தில் தமிழ் மொழியில் தேர்வை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு மீண்டும் கோரிக்கை வலுத்து வருகிறது.
ஆபத்து வருகிறது
இதனிடையே இந்த விவகாரத்தில் முதல் நபராக தனது கருத்தை பதிவு செய்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், கொடுத்து வாக்குறுதியை மீறி மத்திய அரசு மோசடி செய்துள்ளதாக சாடியுள்ளார். மேலும், தமிழ் மொழி குறித்து மோடி புகழ்ந்து பேசுகிறார் என்றால், தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் ஆபத்து வருகிறது என்று பொருள் என வேல்முருகன் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக எம்.பி. கோரிக்கை
இதேபோல் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், அஞ்சல் தேர்வை மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். விரைவில் இது தொடர்பாக மத்திய அரசுக்கு அவர் கடிதம் ஒன்றையும் எழுதவுள்ளார்.