உண்மையிலேயே மர்ம தீவுதானா.. 5 ஆண்டுகளில் 10 ஐஐடிகளில் 27 தற்கொலைகள்.. அதிர வைக்கும் ஆர்டிஐ தகவல்!
சென்னை ஐஐடியில் 5 வருடங்களில் 7 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனராம்
Recommended Video
சென்னை: முக ஸ்டாலின் கேட்டதுபோல, ஐஐடியா? மர்ம தீவா? என்ற சந்தேகம் நமக்கும் எழுந்துள்ளது.. இந்த 5 வருஷத்தில் மட்டும், 10 ஐஐடிகளில் மொத்தம் 27 மாணவர்கள் வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனராம்.. அது மட்டுமில்லை.. இந்த 27 பேரில் 7 மாணவர்கள் சென்னை ஐஐடி மாணவர்கள்தான் என்பதுதான் உச்சக்கட்ட ஷாக் தகவல்.. இதனை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையே தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் மொத்தம் 23 ஐஐடி கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான ஐஐடி வளாகங்களில் நிறைய தற்கொலைகள் நடந்து வருகின்றன.. இதற்கான காரணங்கள் என்ன என்பதும் புரியாத புதிராகவே நீடித்து வருகிறது.
சென்னை ஐஐடியில் பாத்திமா மரணமடையவும்தான், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதற்குக் காரணம், அவரது குடும்பத்தினர் விடாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர் நீதிக்காக. 2016 முதல் வெளியான ஊடக செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் 9 பேர் இதுவரை இறந்துள்ளனர் என்று குத்துமதிப்பாக சொல்லப்பட்டது.
நண்பா! நான் பிழைக்க மாட்டேன்.. என் குடும்பத்தை பார்த்து கொள்.. இறக்கும் முன் டெல்லி இளைஞர் கண்ணீர்!
அதிர்ச்சி தகவல்
ஆனால், 10 ஐஐடி உயர் கல்வி நிறுவனங்களில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 27 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனராம்.. மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அதிலும், இந்த 5 வருஷத்தில், அதிகபட்சமாக சென்னை ஐஐடியில் 7 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்பதுதான் அடுத்த அதிர்ச்சி செய்தி!
தற்கொலைகள்
ஆர்டிஐ ஆர்வலர் சந்திரசேகர் கவுர் என்பவர் ஆர்டிஐ மூலம் இந்தத் தகவலைப் பெற்று வெளியிட்டுள்ளார். போன 2-ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில், 2014-ம் ஆண்டுமுதல் 2019-ம் வரை இந்த 5 வருடங்களில் ஐஐடி கல்வி நிறுவனங்களில் எத்தனை மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் என்று கேட்டிருந்தார்.
7 மாணவர்கள்
இதற்குதான் மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. "இந்தியாவில் உள்ள 10 ஐஐடி உயர் கல்வி நிறுவனங்களில் இந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 27 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளர்கள்... அதில் அதிகபட்சமாக சென்னை ஐஐடியில் 7 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.. இதற்கு அடுத்ததாக, காரக்பூர் ஐஐடியில் 5 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
3 மாணவர்கள்
ஹைதராபாத், டெல்லி ஐஐடியில் தலா 3 மாணவர்களும், மும்பை ஐஐடியில், குவஹாட்டி ஐஐடி, ரூர்கேலா ஐஐடி-யில் தலா 2 மாணவர்களும் தற்கொலை செய்துள்ளனர். வாரணாசி, தான்பாத், கான்பூரில் உள்ள ஐஐடி-யில் தலா ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற தகவலை அளித்துள்ளது.
நடவடிக்கைகள்
ஆனால் இந்த மாணவர்கள் எல்லாம் ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று கேட்டதற்கு, அதற்கான விளக்கம் தரப்படவில்லை. அப்படியானால், ஐஐடி வளாகங்களில் மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க என்னதான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கேட்கப்பட்டது.
குழு
அதற்கு "வளாகத்தில் மாணவர்கள் அளிக்கும் புகார்களை பெற்று, அதை முறைப்படி விசாரிக்கவும், அதன்பேரில் நடவடிக்கை எடுக்கவும் தனியாக ஒரு குழு இருக்கிறது. இந்த குழுவில் மாணவர்கள் குறைதீர்ப்பு மையம், ஒழுங்கு நடவடிக்கை குழு, கவுன்சிலிங் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன" என பதிலளிக்கப்பட்டுள்ளது.
ஆறுதல்
மேலும் இந்தூர், பாட்னா, ஜோத்பூர், புவனேஷ்வர், காந்திநகர், ரோபர், மாண்டி, திருப்பதி, பாலக்காடு, பிலாய், ஜம்மு, கோவா, தார்வாட் ஆகிய ஐஐடிகளில் இந்த 5 வருடங்களில் எந்தவித தற்கொலை சம்பவங்களும் நடக்கவில்லை என்கின்ற ஒரு ஆறுதல் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு
என்றாலும், தற்கொலை செய்து கொண்ட இந்த மாணவர்களின் காரணம் வேறுவேறாக இருந்தாலும் அடுத்தடுத்த தற்கொலைகள் ஏன் என்பதுதான் தற்போது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இனியாவது உயிர்கள் பறி போகும் சூழல் தவிர்க்கப்பட வேண்டும், தடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும்.