என் மகளை கொலை செய்திருக்கலாம்.. உடம்பில் தற்கொலை அறிகுறிகளும் இல்லை.. பாத்திமாவின் தந்தை குமுறல்
என் மகளை கொன்றிருக்கலாம் என்று பாத்திமாவின் தந்தை கூறியுள்ளார்
Recommended Video
சென்னை: "என் மகள் இறந்த சமயம், ரூமில் தங்கியிருந்த இன்னொரு மாணவியை காணோம்.. அவர் எங்கே போனார்? சம்பவம் நடந்த அன்று நைட் விருந்து நிகழ்ச்சி நடந்துள்ளது. என் மகளின் உடம்பில் தற்கொலைக்கான அறிகுறிகள் இல்லை... அதனால் என் மகளை கொன்றிருக்கலாம்.. என்ற சந்தேகம் எழுந்துள்ளது" என்று ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீப் குற்றஞ்சாட்டி உள்ளார்.
கேரள இளம்பெண் பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடி வளாகத்தில் போன 8ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கினை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு புறம், சம்பந்தப்பட்ட ஐஐடி பேராசிரியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இன்னொரு பக்கம், ஐஐடி மாணவர்களிடமும் விசாரணை நடக்கிறது. இப்படி நாலா பக்கமும் விசாரணை நடந்துவரும் நிலையில், பாத்திமாவின் செல்போன், மற்றும் லேப்டாப்பில்தான் நிறைய தகவல்கள், பாத்திமாவின் மெயில்கள் உள்ளதாக கூறப்பட்டது.
செல்போன்
அதன்படி பாத்திமா செல்போன், லேப்டாப்கள் தடயவியல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், பாத்திமாவின் செல்போனை ஆய்வு செய்த தடயவியல் நிபுணர்கள், மாணவி பாத்திமாவின் தற்கொலை குறிப்பு, செல்போன் பதிவுகள் போலியானது அல்ல, செல்போனில் இருந்த தற்கொலை குறிப்பு உண்மையானதுதான் என்று 4 நாட்களுக்கு முன்பு தெரிவித்தனர்.
எதிர்ப்பு
இந்த முதற்கட்ட ஆய்வறிக்கையினை, கோர்ட் மூலம் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸிடம் ஒப்படைத்தனர். இந்த ஆய்வு அறிக்கையைப் பெற்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் தொடர் விசாரணையில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இந்த திடீர் திருப்பத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராசிரியர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் வலுத்து வருகிறது.
விசாரணை
இதனிடையே, பாத்திமாவின் தந்தை லத்தீப் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வர மூர்த்தியை சந்தித்து பேசினார். நீண்ட நேரம் அவரிடம் ஈஸ்வரமூர்த்தி விசாரணை நடத்தியதாக சொல்லப்படுகிறது. பின்னர் வெளியே வந்த லத்தீப் செய்தியாளர்களிடம் பேசியபோது:
கொலையா?
"எனது மகளின் சாவு குறித்து ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடந்து வரும் விசாரணை எனக்கு திருப்தியாக உள்ளது. கோட்டூர்புரம் போலீசார் முதலில் இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை. ஏன் என்றால், என் மகள் சாவு தற்கொலையாக இருக்க வாய்ப்பே இல்லை.. அவள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு அதிகமாக இருந்தது.
13 கேள்விகள்
எனக்கு கிடைத்த தகவல்படி இந்த வழக்கில் 13 கேள்விகள் இப்போது எழுந்துள்ளது. இவைகளை வைத்துதான், என் மகளை கொலை செய்திருக்கலாம் என்கிறேன். மகள் இறந்த ரூமை கூட அவர்கள் முறையாக ஆய்வு செய்யவில்லை. இதற்கான தடயங்களையும் அவர்கள் சேகரிக்கவில்லை. முக்கியமாக பாத்திமாவின், செல்போன், லேப்-டாப் போன்றவற்றை எடுத்து சென்று ஆய்வு செய்யவில்லை.. சம்பவம் நடந்த உடனேயே மகளின் ரூமை பூட்டி சீல் வைக்கவில்லை.
நைட் விருந்து
என் மகளுடன் இன்னொரு மாணவி தங்கியிருந்தார்.. ஆனால் சம்பவத்தன்று அந்த மாணவி ரூமில் இல்லை.. அவர் எங்கே போனார்? சம்பவம் நடந்த அன்று நைட் விருந்து நிகழ்ச்சி நடந்துள்ளது. அதை பற்றியும் யாரும் விசாரிக்கவில்லை.
சிசிடிவி காமிரா
அங்கிருந்த சிசிடிவி கேமிராவையும் இவர்கள் ஆய்வு செய்யவில்லை. இப்படி நிறைய கேள்விகள் எனக்கு எழுந்துள்ளது. ஆனால், தற்கொலைக்கான அறிகுறிகள் எனது மகள் உடலில் இல்லை. முறையான விசாரணைதான் எனக்கு இப்போது தேவை" என்றார்.