தற்கொலை குறிப்பு உண்மையானதே.. தடயவியல் நிபுணர்கள் உறுதி.. மாணவி பாத்திமா வழக்கில் அதிரடி திருப்பம்
பாத்திமாவின் தற்கொலை குறிப்பு உண்மையானதே என கூறப்பட்டுள்ளது
சென்னை: ஐஐடி மாணவி பாத்திமாவின் செல்போனில் இருந்த தற்கொலைக் குறிப்பு, போலியானது இல்லை, அது உண்மையானதே என்று தடயவியல் நிபுணர்கள் உறுதி அளித்திருப்பது வழக்கில் மிக முக்கிய திருப்பத்தினை ஏற்படுத்தி உள்ளது.
கேரள இளம்பெண் பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடி வளாகத்தில் போன 8ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கினை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு புறம், சம்பந்தப்பட்ட ஐஐடி பேராசிரியர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இன்னொரு பக்கம், ஐஐடி மாணவர்களிடமும் விசாரணை நடக்கிறது.
தூங்கி கொண்டிருந்த 17 பேரை.. காவு வாங்கிய காம்பவுண்ட் சுவர்.. வீட்டு ஓனர் சிவசுப்பிரமணியம் கைது
செல்போன்
இப்படி நாலா பக்கமும் விசாரணை நடந்துவரும் நிலையில், பாத்திமாவின் செல்போன், மற்றும் லேப்டாப்பில்தான் நிறைய தகவல்கள், பாத்திமாவின் மெயில்கள் உள்ளதாக கூறப்பட்டது. ஏனெனில், பாத்திமா தற்கொலை செய்ததற்கு காரணம், தேர்வில் மார்க் குறைவாக எடுத்ததுதான் என்று கோட்டூர்புரம் போலீசார் தெரிவித்திருந்தனர்.
பேராசிரியர்கள்
ஆனால், தனது தற்கொலைக்கு காரணம் ஐஐடியின் இணை பேராசிரியா்தான் என்று பெயர் குறிப்பிட்டதுடன், மேலும் 2 பேராசிரியா்கள் தன்னை மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் பாத்திமா செல்போனில் கூறியிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். அதனால், பாத்திமாவின் செல்போன் மிக முக்கியமான தடயமாக இந்த வழக்கில் உள்ளது.
லேப்டாப்கள்
எனவே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவைகளை தடயவியல் துறையினருக்கு பாத்திமா குடும்பத்தினர் ஒப்படைத்தனர். போலீஸ் அதிகாரிகள், பாத்திமாவின் குடும்பத்தினர் முன்னிலையிலேயே செல்போன், லேப்டாப்கள் ஓபன் செய்யப்பட்டன.
உண்மையானது
இப்போது, பாத்திமா செல்போனில் இருந்த தற்கொலைக் குறிப்பு உண்மையானதுதான் என்று தடயவியல் நிபுணர்களின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. பின்னர், பாத்திமாவின் செல்போனை ஆய்வு செய்த தடயவில் நிபுணர்கள், மாணவி பாத்திமாவின் தற்கொலை குறிப்பு, செல்போன் பதிவுகள் போலியானது அல்ல, செல்போனில் இருந்த தற்கொலை குறிப்பு உண்மையானதுதான் என்று தெரிவித்துள்ளனர்.
விசாரணை
இந்த முதற்கட்ட ஆய்வறிக்கையினை, கோர்ட் மூலம் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த ஆய்வு அறிக்கையைப் பெற்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் தொடர் விசாரணையில் தற்போது ஈடுபட்டுள்ளனர். மாணவியின் தற்கொலைக் குறிப்பு, போலியானது இல்லை, அது உண்மையானதே என்று தடயவியல் நிபுணர்கள் உறுதி அளித்திருப்பது இந்த வழக்கில் மிக முக்கிய திருப்பத்தினை ஏற்படுத்தி உள்ளது.
இந்த திடீர் திருப்பத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராசிரியர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் வலுத்துள்ளது.