"இசை"யை தூக்கி குடோனில் போட்ட பிரசாத்.. நெஞ்சு வெடிக்கும் வேதனையில் இளையராஜா ரசிகர்கள்!
இளையராஜாவின் வழக்கறிஞர் பேட்டி தந்துள்ளார்
சென்னை: இளையராஜா ரெலாம்ப மனசு உடைஞ்சு போயிட்டார்.. அந்த ரூம் சாவி அவர்கிட்டதான் இருக்கு.. ஆனால், அந்த ரூமை தகர்த்து விட்டிருக்கிறார்கள்.. அங்கிருந்த நோட்ஸ், மியூசிக் கருவிகள், விருதுகள் எல்லாத்தையும் தூக்கிட்டு போய் ஒரு குடோன்ல போட்டு வெச்சிருக்காங்க.. இதெல்லாம் கேட்டு ராஜா சார் ரொம்பவும் நொந்து போய்ட்டார்" என்று பிரசாத் ஸ்டுடியோவில் இன்று நடந்த சம்பவம் குறித்து இளையராஜாவின் வழக்கறிஞர் வேதனை தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை வடபழனியில் உள்ளது பிரசாத் ஸ்டூடியோ... இளையராஜா கம்போஸிங், ரெக்கார்டிங்குகள் என அனைத்தையுமே இங்கேதான் செய்வார்.. 42 வருஷங்களாக அவருக்கு இப்படித்தான் பழக்கம்.. இதுதான் அவருக்கு சென்டிமென்ட் இடமும்கூட.. அன்னக்கிளி முதல் இங்குதான் அவர் இசையமைத்து வருகிறார்.
காலையில் 7 மணிக்கெல்லாம் பிரசாத்துக்கு வந்துவிடுவார் இளையராஜா.. ராத்திரி எப்போது வீட்டுக்கு போவார் என்றே யாருக்குமே தெரியாது.. தன் குடும்பத்தைவிட அதிக நேரம் இளையராஜா இருப்பது இங்குதான்.. அவரை யாராவது பார்க்க வேண்டும் என்றால்கூட பிரசாத்துக்குபோய் தான் பார்ப்பார்கள்!
ஒப்பந்தம்
நன்றாக இருந்த இந்த நிலை, ஒரு வருஷமாக பிரச்சனை வெடித்து வருகிறது... "ஸ்டூடியோவுக்கு மாத வாடகையாக ஒரு தொகையை தந்தால் நல்லா இருக்கும்" என்று பிரசாத் தரப்பு கேட்க, அதற்கும் இளையராஜா சம்மதித்ததாகவும் சொல்லப்பட்டது. இதற்கான ஒப்பந்தமும் கைழுத்தாகும்போதுதான், திடீரென "அந்த இடத்தை நாங்க யாருக்கும் தருவதாக இல்லை.. காலி செய்துடுங்க" என்று இளையராஜா தரப்பிடம் சொன்னதாகவும் செய்திகள் வந்தன.
கோர்ப்புகள்
இது தொடர்பான வழக்கு சென்னை 17-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது... தான் எழுதிய இசைக் கோர்ப்புகள், இசைக் கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும், தியானம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்று இளையராஜா சென்னை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்... இந்த வழக்கு விசாரணையின்போது முதலில் ஆட்சேபம் தெரிவித்தாலும், பின்பு சில நிபந்தனைகளுடன் அனுமதிக்க பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது.
அனுமதி
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாதத்தில், நீதிபதி சதீஷ்குமார் ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் 4 மணிக்குள் பிரசாத் ஸ்டுடியோவிற்குள் சென்று தியானம் செய்யவும், உடைமைகளை எடுத்துவரவும் இளையராஜாவிற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இளையராஜாவுடன் அவரது ஓர் உதவியாளர் மற்றும் இரண்டு இசை உதவியாளர்கள் செல்லவும் அனுமதி அளித்தார்.
காலி
இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு இளையராஜா பிரசாத் ஸ்டியோவுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது... இதனால் எப்படியும் தன்னுடைய பொருட்கள் எல்லாம் எடுத்துவிட்டு, தியானம் செய்துவிட்டு பிரசாத் ஸ்டுடியோவை இளையராஜா காலி செய்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது... அதனால் காலையிலேயே பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்தனர்.. இதனால் போலீசாரும் குவிந்தனர்.. ஆனால், ராஜா வரவில்லை.
மன உளைச்சல்
இளையராஜா தரப்பிலும், பிரசாத் ஸ்டியோ தரப்பிலும் மட்டுமே வக்கீல்கள் வந்தனர்.. இளையராஜா மன உளைச்சலில் இருப்பதாகவும், அதனால்தான் இன்று அவர் வரவில்லை என்றும் அவருடைய பிஆர்ஓ கூறினார்.. ஆனால், ஸ்டுடியோவை காலி செய்வதற்காக 2 லாரிகளும் வரவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர், இளையராஜாவின் வக்கீல், சரவணன் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "இளையராஜா ரூம் சாவி அவர்கிட்டயேதான் இருக்கு.. ஆனால், இப்போ நான் வந்து பார்க்கும்போது, அந்த ரூமே அங்கே இல்லை.. அது தகர்க்கப்பட்டு உள்ளது.. அங்கிருந்த பொருட்கள் எல்லாம் குடோனில் வைக்கப்பட்டுள்ளது...
வேதனை
அதில் என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதை சரிபார்க்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இளையராஜா அந்த ரூமில் இருந்ததிற்கான சுவடே இல்லை.. இதை இளையராஜாவிடம் சொன்னோம்.. இதை கேட்டவுடன் அவர் ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டார்.. "அந்த ரூமையும், அங்கிருக்கும் பொருட்களையும் பார்க்கணும்னு நினைச்சுதான் வரலாம்னு இருந்தேன்.. ஆனால், அங்கே ரூமே இல்லைன்னு சொன்னால், நான் அங்க வந்து என்ன செய்ய போறேன்" என்று சொல்லிட்டார்..
குடோன்
இங்கே ஒரு பெரிய ரெக்கார்டிங் தியேட்டர் இருக்கு.. அதில் 5 ரூம் இருக்கு.. அங்கதான் அவருடைய பத்ம விபூஷண் விருது கூட இருக்கு.. அந்த அறைக்குத்தான் அனுமதி மறுத்துவிட்டார்கள்.. தன்னுடைய மிக முக்கியமான கம்போஸிங் நோட்ஸ்கள், போட்டோக்கள், விருதுகள் என எல்லாமே அந்த குடோனில் போட்டு வெச்சிருக்காங்க.. இதைதான் அவரால் தாங்க முடியவில்லை" என்றார் வக்கீல் சரவணன்.