விழியில் விழுந்து.. இதயம் நுழைந்து.. பாரதிராஜா சார்.. இளையராஜா சார்.. அந்த சிரிப்பை பாருங்க சார்!
இளையராஜா - பாரதிராஜாவின் புகைப்படங்கள் வைரலாகின்றன
சென்னை: இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா - நம்ம பாசத்துக்குரிய பாரதிராஜா = இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.
பலநாள் பசித்து கிடந்தவனுக்கு பால்சாதம் கிடைத்தது போல.. கரடு முரடாய் காய்ந்து கிடந்த பூமியை வர்ஷிக்க வந்த கார்மேகம் போல.. கிராமத்தையும், அதன் எழில் கொஞ்சும் வனப்பையும், அதில் வாழும் மனிதர்களின் ஆன்ம ஓலத்தையும் அப்பட்டமாக வெளிக் கொண்டுவந்து ஜொலிக்க வைத்தவர்தான் பாரதிராஜா. இயற்கையின் மீது ஆழ்ந்த காதலை உடையவர்.
இதேதான் இளையராஜாவும்.. எம்ஜிஆர், சிவாஜி பாடல்களுடன் இந்தி பாடல்களான ஆராதனா, பாபி போன்ற படங்களின் பாடல்களை மொழியும், அர்த்தமும் தெரியாமல் தமிழக மக்கள் முனகிக்கொண்டிருந்த நேரம்.. இப்படி இளையராஜா என்ற ஆளமை வந்து தமிழகத்தை கட்டிப்போடும் என்று யாருமே நினைக்கவில்லை.
மயிலு
16 வயதினிலே - மண்வாசனையை ரசிகர்கள் நுகர்ந்த முதல் படம்... திரைப்படம் என்றாலே இப்படியெல்லாம்தான் இருக்கும் என்னும் மாயையை சுக்குநூறாக உடைத்தெறிந்த படம். இயக்குனராக வரவேண்டும் என்ற கனவுடன் 'மயிலு' என்ற பெயரில் கதை எழுதி... திரையுலகில் காலடி எடுத்து வைத்த பாரதிராஜாவுக்கு.. இளையராஜாவின் கிராமிய இசையானது திருப்புமுனையை தந்தது.
காதல் ஓவியம்
இதற்கு பிறகு காதல் ஓவியம், அலைகள் ஓய்வதில்லை.. டிக் டிக் டிக், கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை, கடலோர கவிதைகள் என இந்த ஜாம்பவான்களின் கலக்கல் காம்பினேஷன்கள் மக்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்க்க செய்தது.
நாடோடி தென்றல்
இதை எல்லாம் தாண்டி.. வைகை ஆற்று மண்ணில் இருந்து வந்த இருவரின் நட்பு ஆழமாகி கொண்டே இருந்தது. பாரதிராஜா, இளையராஜாவை வாடா போடா என்று பொதுப்படையாகவே உரிமையுடன் அழைப்பார். அதே நேரத்தில், இவர்களுக்குள் பிரச்சனை வராமல் இல்லை.. வரத்தான் செய்தது.. ஆனால் அதனை இருவருமே மனசார ஒட்டி வைத்து கொள்ளவில்லை. நாடோடி தென்றல் படத்தின்போது இவர்களுக்குள் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அதற்குபிறகு நெருக்கம் குறைந்து காணப்பட்டது என்னவோ உண்மைதான்.
நான் இருக்கேன்
ஒருமுறை பிரசாத் ஸ்டுயோவிற்குள் இளையராஜாவை அனுமதிக்க கூடாது என்ற ஒரு விவகாரம் எழுந்தது.. விஷயத்தை கேள்விப்பட்டதும் கொதித்து போய்விட்டார் பாரதிராஜா. "பல வருஷமா ஒரு ராஜா மாதிரி அங்க வாழ்த்துட்டு இருக்கிறவன் இளையராஜா.. அவனை ஸ்டுடியோவை விட்டுபோக சொல்ல யாராலும் முடியாது" என்று ஆவேசப்பட்டார். உடனே இளையராஜாவுக்கு போனை போட்டு, "நான் இருக்கிறேன், எவன் வருவான்னு பார்த்துக்கறேன்" என்று கொதித்தெழுந்ததை கண்டு தமிழ் சினிமா உலகமே நடுங்கியது. இருவரின் நட்பையும் ஆச்சரியத்துடன் புருவம் உயர்த்தி வியந்தது.
|
வைரல் போட்டோ
இப்போது, 27 வருஷம் கழித்து இருவரும் ஒன்றாக சந்தித்து கொண்டுள்ளனர்.. இது சம்பந்தமான போட்டோ இப்போது வெளியாகி உள்ளது.. ஒரே காரில் இருவரும் எங்கேயோ போய் கொண்டிருக்கிறார்கள். நண்பர்கள் முகத்திலும் அப்படி ஒரு சிரிப்பு.. மலர்ச்சி.. பூரிப்பு.. பிரிந்தவர்கள் மீண்டும் கூடினால் பேசத்தான் வேண்டுமோ என்பது போல இருக்கிறது அந்த போட்டோவை பார்த்தால்.. நமக்கு இன்னொன்றையும் சொல்ல தோன்றுகிறது.. இவர்கள் திரும்பவும் இணைந்தால் நல்லா இருக்குமே என்று!
ஆரோக்கியம்
காலம் நமக்கு வழங்கிய அற்புத கலைஞர்கள் இளையராஜா - பாரதிராஜா.. அதிசயங்களே அதிசயித்து பார்க்கும் இந்த அற்புத கலைஞர்கள் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதே அனைவரின் ஆழ்மனசு எண்ணம்!