Subhasri: சென்னையில் அ.தி.மு.க பேனர் விழுந்து 23 வயது இளம்பெண் சுபஸ்ரீ பலி
Recommended Video
சென்னை: சென்னையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் வைத்த பேனர் விழுந்து 23 வயது பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் தமது மகன் திருமணத்துக்காக பேனர்களை சாலையில் வைத்திருந்தார். அந்த சாலையில் பல்லாவரத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
கனடா செல்வதற்கான தேர்வை பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் எழுதிவிட்டு சுபஸ்ரீ திரும்பிக் கொண்டிருந்த போது ஜெயபால் வைத்த பேனர்களில் ஒன்று சரிந்து விழுந்தது. பேனர் சரிந்து விழுந்ததால் சுபஸ்ரீ இருசக்கர வாகனத்துடன் நிலைதடுமாறி கீழே விழுந்தர்.
அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கினார் சுபஸ்ரீ. இதில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுபஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
2017-ல் கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு பேனர் சரிந்து ரகு என்கிற இளைஞர் பலியானார். இதனையடுத்து பேனர்கள் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை கடுமை காட்டியிருக்கிறது. ஆனாலும் பேனர் கலாசாரத்தால் அப்பாவி பொதுமக்கள் பலியாவது தொடர் கதையாகி வருகிறது.
எதிர்கால கனவுகளுடன் காத்திருந்த சுபஸ்ரீயின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாலின் கண்டனம்
அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. அவருக்கு என் இரங்கல்!
— M.K.Stalin (@mkstalin) September 12, 2019
அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? https://t.co/nyNxhpGmkf
இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. அவருக்கு என் இரங்கல்! அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?
இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.