சட்டசபையில் மீண்டும் கருணாநிதி.. 3 ஆண்டுகளுக்கு பிறகு! ட்விட்டரில் வைரலாகும் #KalaignarInAssembly
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், கருணாநிதியின் வாழ்க்கை பயணத்தை விளக்கும் புகைப்படமும் #KalaignarInAssembly என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது
Recommended Video
தமிழ்நாடு சட்டசபை நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.6!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழ்நாடு சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தைத் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு சட்டசபை
தமிழக சட்டசபையில் 16ஆவது தலைவராகக் கருணாநிதியின் படம் திறக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் காமராஜருக்குப் பிறகு சட்டசபையில் ஒருவரது படத்தைக் குடியரசுத் தலைவர் திறந்து வைப்பது இதுவே முதல்முறையாகும். நின்று கொண்டிருக்கக் கூடிய நிலையில் கருணாநிதியின் உருவப் படம் வரைந்து பொருத்தப்பட்டு இருக்கிறது. அதற்குக் கீழே , காலம் பொன் போன்றது.. கடமை கண் போன்றது என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. சென்னை மாகாணத்தில் 1921ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி சட்டசபை தொடங்கி வைக்கப்பட்டது. அதனை நினைவுபடுத்தும் வகையில் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்னாள் என்றும் கருணாநிதி படத்தைக் குடியரசுத் தலைவர் திறந்து வைத்ததை முதல்வராக மகிழ்கிறேன்; மகனாக நெகிழ்கிறேன் என்றார். கருணாநிதியின் படத்தைத் திறந்து வைத்துப் பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் மு.கருணாநிதியின் படத்தைத் திறந்ததில் மகிழ்கிறேன். உண்மையில் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் எனத் தமிழில் பேசினார்.
புகைப்படம் வைரல்
இந்த நிகழ்வை திமுகவினர் டிவிட்டரிலும் கொண்டாடி வருகின்றனர். சிறு வயது முதல் கருணாநிதியின் பயணத்தை விளக்கும் வகையில் உள்ள படத்தை டிவிட்டரில் டிரெண்டிாக்கி வருகின்றனர். சிறு வயதிலேயே அரசியலில் நுழைந்த கருணாநிதி 1957ஆம் ஆண்டு முதல் 13 முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஐந்து முறை தமிழ்நாடு முதல்வராக இருந்த கருணாநிதி, ஒரு முறை கூட தேர்தலில் தோல்வியையே சந்திக்காதவர் ஆவார்,
#KalaignarInAssembly
அதேபோல #KalaignarInAssembly என்ற ஹேஷ் டேக்கும் ட்விட்டர் தளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் #KalaignarInAssembly என்ற ஹேஷ்டேக்கில் ட்வீட் செய்துள்ளனர். இன்னும் சிலர் 60 ஆண்டுகள் சட்டசபையில் இருந்தவர், மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சட்டசபையில் நுழைந்துள்ளார் என்றும் ட்வீட் செய்து வருகின்றனர்.
சமத்துவபுரம்
சென்னையை இந்தியாவின் டெட்ராய்ட்டாக மாற்றியதற்குச் சொந்தக்காரர் என்றும் தமிழ்நாட்டில் மகேந்திரா நிறுவனம் முதலீடு செய்யக் காரணமாக இருந்தவர் என்றும் பதிவிட்டு வருகின்றனர். "சமத்துவபுரத்தைப் பற்றிச் சொல்லும் போது இதை இந்தியா முழுமைக்கும் கொண்டு சென்றிருக்க வேண்டும் என்று ஏக்கத்துடன் ஆளுநர் சொன்ன போது தலைவரின் சமூகநீதி இப்போதாவது இவர்களுக்கு எல்லாம் புரிகிறதே என்ற பெருமிதமாய் இருந்தது" எனப் பதிவிட்டுள்ளார்.