4 ஆம் தேதி கன்னியாகுமரி- பாம்பன் இடையே புரேவி புயல் கரையை கடக்கும்- வானிலை மையம்
சென்னை: டிசம்பர் 4-ஆம் தேதி கன்னியாகுமரி - பாம்பன் இடையே புரேவி புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறுகையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது புரெவி புயலாக உருவாக வாய்ப்புள்ளது. நாளை மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும்.
புயல் கரையை கடக்கும் போது 75 முதல் 85 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. சில நேரங்களில் 95 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த புயலால் தென்தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை பெய்யும்.
இலங்கையின் திருகோணமலை அருகே கரையை கடக்கும் புயல் உடனடியாக மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடாவுக்குள் நுழைந்து கன்னியாகுமரி பகுதிக்கு 3ஆம் தேதி நகர்கிறது.
பின்னர் மேற்கு - தென்மேற்கு அருகில் நகர்ந்து டிசம்பர் 4-ந்தேதி கன்னியாகுமரிக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் எனத் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.