காலியாகி வரும் அமமுக கூடாரம்... டிடிவி தினகரன் தடுக்கத் தவறுவது ஏன்?
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில் இருந்து நாளுக்கு நாள் முக்கிய பிரமுகர்கள் கட்சி மாறிவருவதால் அந்தக் கட்சி கலகலத்து போய் உள்ளது.
அதிமுகவில் இருந்து சசிகலாவும், டிடிவி தினகரனும் ஓரங்கட்டப்பட்டதை அடுத்து அமமுக மதுரை மாவட்டம் மேலூரில் மிக எழுச்சியாக தொடங்கப்பட்டது. கட்சி தொடக்க விழாவில் இருந்த முக்கிய பிரமுகர்கள் திவாகரன், செந்தில்பாலாஜி, இசக்கி சுப்பையா, பச்சைமால், இசையமைப்பாளர் தினா, தகுதி செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சிலர் உட்பட அனைவரும் வெவ்வேறு கட்சிக்கு சென்றுவிட்டனர். இதற்கு காரணம் டிடிவி தினகரனின் அனுகுமுறையும், கட்சியை வழிநடத்தும் விதமும் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் செந்தில்பாலஜியை எதிர்த்து போட்டியிட்ட அமமுக வேட்பாளர் சாகுல்ஹமீது நேற்றிரவு மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து விருதுநகர் மேற்கு மாவட்ட அமமுக செயலாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவருமான எதிர்க்கோட்டை சுப்பிரமணியன் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். இப்படி நாளுக்கு நாள் முக்கிய பிரமுகர்கள் கட்சியை விட்டு வெளியேறுவதால் அமமுகவின் செயல்பாடு முடங்கிப்போய் உள்ளது.
துபாயில் உணவகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வரும் சாகுல் ஹமீது கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர். இவர் சென்னை, மஹாராஷ்டிரா மாநிலங்களிலும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக அரவக்குறிச்சி பகுதியில் விவசாய நிலங்களும் உள்ளன. பணத்திற்கு பஞ்சமில்லாத இவர் கடந்த ஒரு வருடமாக அமமுக வுக்காக பல சி க்களை காலி செய்துவிட்டார். ஆனால் சொல்லிக்கொள்ளும் வகையில் தினகரனிடம் இருந்து இவருக்கு மரியாதை கிடைக்கவில்லையாம். இதனால் அரசியலில் இருந்து ஒதுங்கி தொழில்களை கவனிக்க நினைத்த அவரை ஒரே அமுக்காக அமுக்கி அண்ணா அறிவாலயம் கொண்டு வந்துவிட்டார் செந்தில்பாலாஜி.
இதேபோல் எம்.எல்.ஏ.வாக இருந்து தினகரனை நம்பி பதவியை பறிகொடுத்து நட்டாற்றில் நிற்கும் எதிர்க்கோட்டை சுப்பிரமணியனுக்கு பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகள் உள்ளனவாம். மேலும், கடனும் அதிகமாக இருக்கிறதாம். இந்த நிலையில் அமமுகவில் இருந்துகொண்டு கைக்காசை செலவழிக்க அவருக்கு வழியில்லையாம். அவரை திமுகவுக்கு அழைத்துச்செல்ல முயற்சிகள் நடப்பதை அறிந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சில வாக்குறுதிகளை கொடுத்து மீண்டும் தாய்க் கழகமான அதிமுகவுக்கு இழுத்துச்சென்றுவிட்டார்.