அதிமுகவில் 3 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர்...? 4 மணி நேரமாக விவாதித்த ஐவர் குழு
சென்னை: கொரோனா பரபரப்புக்கு மத்தியில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஐவர் குழு 4 மணி நேரமாக ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் தொடர்பாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 3 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்கிற வீதம் நியமனம் செய்வது பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது.
இப்போது உள்ள மாநகர், புறநகர் என்ற நிர்வாக அமைப்பு முறையை மாற்றி குறிப்பிட்ட தொகுதிகளுக்கு ஒரு செயலாளரை நியமித்தால் பணிச்சுமை குறையும் என பேசப்பட்டிருக்கிறது.
ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட ஐவர் குழு ஆலோசனை
அதிமுக ஐவர் குழு
அதிமுகவில் ஐவர் குழு எனப்படும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு அதிமுக தலைமைக் கழகத்தில் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளது. மாலை தொடங்கிய இந்த கூட்டம் சுமார் 4 மணி நேரம் வரை தொடர்ந்தது. அதில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் தொடர்பாக பிரதானமாக விவாதிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள நிர்வாக அமைப்பு முறையை மாற்றுவது பற்றி அந்த குழு பேசியிருக்கிறது.
புதிய நடைமுறை
தற்போதைய நடைமுறைப்படி மாவட்டச் செயலாளர்கள் மாற்றமோ, நியமனமோ நடைபெற்றால் பதவி கிடைக்காதவர்கள் சட்டமன்றத் தேர்தலின் போது ஒதுங்கிக்கொள்வார்கள் என்பதை கருத்தில்கொண்டு, மாவட்டவாரியாக முன்னணி நிர்வாகிகள் பலருக்கும் பொறுப்புகள் வழங்கப்படுவது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 3 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று நியமனம் செய்தால் என்ன என்ற யோசனையும் அவர்களுக்குள் எழுந்துள்ளது.
முனுசாமி கறார்
மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தை பொறுத்தவரை இப்போது உள்ள நடைமுறை தொடர்ந்தாலும் சரி, இல்லை புதிய நிர்வாக அமைப்பு ஏற்படுத்தினாலும் சரி, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., ஆகிய இருவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது கே.பி.முனுசாமியின் வாதமாக உள்ளது. இதைத்தான் நேற்று நடைபெற்ற ஐவர் குழு ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் வலியுறுத்தியுள்ளார். அவரது கருத்தை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் வழிமொழிந்துள்ளார்.
விரைவில் அறிவிப்பு
இதனிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இரண்டில் இருந்து மூன்று பேர் அடங்கிய பெயர் பட்டியலை இந்தக் குழு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் அவர்கள் தேர்வு செய்யப்படுபவர்கள் மாவட்டச் செயலாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.