உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் தேர்வு... அதிமுகவில் யார் கை ஓங்கும்?
சென்னை: அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் நடைமுறையில், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகிய இருவரும் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்காவில் இருந்தாலும் கூட, தினமும் இரண்டு முறை தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சுமார் 10 நிமிடமாவது கலந்துரையாடுகிறாராம்.
இந்நிலையில், ஆளுக்கு 50 % என கோட்டா பிரித்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோர் சீட் வழங்குவார்கள் என்ற தகவலும் அதிமுக வட்டாரத்தில் உலா வருகிறது.
எதை விட்டு வைக்கவில்லை.. இந்த தேன் சிட்டு.. மயிலறகாய் வருடும்.. பி.சுசீலா.. 85 வயசு!
யார் கை ஓங்கும்?
அதிமுகவிற்கு இரட்டை தலைமை உள்ளதால் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் தேர்வில் யார் கை ஓங்கும் என்றக் கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் தேர்வு செய்தார். இந்நிலையில் இப்போது உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளதால் வேட்பாளர்கள் தேர்வில் யாருடைய பங்கு அதிகம் இருக்கும் எனக் கவனிக்கப்படுகிறது.
அங்கீகாரம்
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் அதிகளவில் சீட் வழங்க தீவிரம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் ஏற்கனவே ஒரு பட்டியல் தயார் செய்து வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக இக்கட்டான நேரத்தில் தன்னுடன் நின்ற நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க அவர் நடவடிக்கை எடுத்து வருகிறாராம்.
ஆளுக்கு 50%
இதனிடையே இது தொடர்பாக தென் மாவட்டத்தை சேர்ந்த மூத்த அதிமுக நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது, ''உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை நாங்கதான் ஜெயிப்போம், அதிக நகராட்சிகள், மாநகராட்சிகளை கைப்பற்றுவோம். அதற்காக வலுவான, மக்கள் செல்வாக்கு உள்ள வேட்பாளர்களை களம் இறக்க உள்ளோம். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆளுக்கு ஐம்பது சதவீதம் தங்கள் ஆதரவாளர்களுக்கு சீட் கொடுப்பார்கள் '' எனக் கூறினார்.
கோட்டா பிரிப்பு
உயர்கல்வி படிப்புகளில் கோட்டா உள்ளதை போல் அதிமுகவிலும் கோட்டா பிரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஓ.பி.எஸ். கோட்டா, இ.பி.எஸ். கோட்டா என பிரித்து அதில் சீட் வழங்கப்படும் எனத் தெரிகிறது. இதுமட்டுமின்றி வைத்திலிங்கம், பா.வளர்மதி, தம்பிதுரை ஆகியோரும் தங்கள் கோட்டாவில் ஆதரவாளர்களுக்கு சீட் பெற்றுக்கொடுக்க காய்கள் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.