வெளியில் வந்து பார்த்து கொள்கிறேன்.. அதுவரைக்கும் அமைதியா இருங்கப்பா.. சசிகலா மெசேஜ்!
சிறையில் சந்தித்தபோது தினகரனுக்கு சசிகலா அறிவுரை செய்துள்ளதாக கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: வழக்கமாக டிடிவி தினகரனை சந்திக்கும்போதெல்லாம் வறுத்தெடுக்கும் சசிகலா, இந்த முறை அந்த அளவுக்கு கோபப்படவில்லை. ஆனால் பதிலுக்கு ஒரே ஒரு வார்த்தையை மட்டும் திரும்ப திரும்ப சொல்லி அனுப்பி வைத்திருக்கிறாராம்!
ஒவ்வொரு முறை தினகரன் சிறைக்கு சென்று சசிகலாவை பார்க்கும்போதெல்லாம் ஏதாவது பிரச்சனையோடுதான் செல்வார். ஒன்று கோர்ட், கேஸ்களில் பாதகமான முடிவாக இருக்கும், அல்லது கட்சிக்குள் பூசல், குழப்பம் என்று இருக்கும்.
இதில் எதுவுமே கிடைக்காவிட்டால், தங்களை நம்பி இருந்த 18 பேரின் வாழ்க்கை, எதிர்காலம் என்னாவது என்ற கேள்வி எழும். ஆக மொத்தம், சந்திப்பின்போது மகிழ்ச்சியான விஷயங்களை பகிர்வது என்பது இந்த 3 வருஷத்தில் அரிதுதான்.
கோபம்
ஒவ்வொரு முறையும் கட்சிக்குள்தான் சிக்கல் இருக்கும். அதிலும் இரண்டு நாளைக்கு முன்னாடி தினகரன், சசிலாவை பார்த்தபோது கட்சியே காணாமல் போகும் நிலை வந்திருந்தது. அதனால் எப்படியும் சரமாரி வார்த்தைகள் வரும், எக்குதப்பாய் எதுவும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
புன்சிரிப்பு
ஆனால் கூல் அரசியல்வாதி, வழக்கம்போல புன்சிரிப்புடன்தான் சென்னை திரும்பினார். நீண்ட நேர ஆலோசனை, புது நிர்வாகிகள் லிஸ்ட் என்று பளிச்சென வந்து இறங்கினார். தினகரன் வந்து பார்ப்பதற்கு முன்னமேயே சசிகலாவுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும்போல.
அட்வைஸ்
முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு செல்வது குறித்தோ, கட்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறித்தோ பெரிசாக அலட்டி கொள்ளவில்லை. அதே சமயம், தினகரனுக்கு ஒரே ஒரு அட்வைஸ் மட்டும் தந்திருக்கிறார். "இனி யாரையும் வெளியே போகாமல் பார்த்து கொள். அனுசரித்து நடந்து கொள். மற்றதை நான் வெளியில் வந்து பார்த்து கொள்கிறேன்" என்பதுதானாம் அது.
தன்னிச்சை
தினகரன் எங்களை யாருமே மதிக்கவில்லை, தன்னிச்சையாக செயல்படுகிறார் என்பதுதான் இதுவரை அமமுகவில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள் சொன்ன குற்றச்சாட்டு. இது உண்மையோ, பொய்யோ நமக்கு தெரியாது. ஆனால் இவர்களின் ஸ்டேட்மெண்ட்டை சசிகலா நன்றாக கவனித்துள்ளார்.
கலக்கம்
ஏனெனில், தன் பேச்சை மீறியே எல்லா விஷயத்திலும் தினகரன் செயல்படுகிறார் என்பதுதான் சசிகலாவின் இத்தனை நாள் வருத்தமும், கோபமும். இதையெல்லாம் கணக்கு போட்டுதான், இந்த வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லி அனுப்பி உள்ளார். மேலும் "வெளியில் வந்து பார்த்து கொள்கிறேன்" என்றால் அந்த அர்த்தம் என்ன என்று அதிமுக உள்ளிட்டவர்களுக்கு கலக்கத்தை தந்து வருகிறது.