காய்கறி, பழங்கள் வீடு தேடி வரும்.. சென்னை மக்களே இந்த போன் நம்பருக்கு கூப்பிடுங்க: அதிகாரி அறிவிப்பு
சென்னை: சென்னையில், ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் அடங்கிய தொகுப்பு வீட்டுக்கே வினியோகிக்கப்படும் என்று, சென்னை வளர்ச்சி குழும செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மொத்தம் 156 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 40க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 48 பேரில் 48 பேர், வெளிமாநிலத்திற்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறினார்.
மண்டலங்கள்
திருவிக. நகர் மண்டலத்தில் 22 பேர், கோடம்பாக்கம் 19 பேர், அண்ணாநகர் 15 பேர், தண்டையார்பேட்டை 12, தேனாம்பேட்டை 11, வளசரவாக்கம், அடையாறு, திருவொற்றியூர் தலா 4, பெருங்குடி மண்டலத்தில் 5 பேர் உட்பட சென்னையில் மொத்தம் 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நேற்றைய அரசு புள்ளி விவரம் கூறுகிறது.
தொலைபேசி எண்
இதனிடையே, மக்கள் கடைகளுக்கு செல்வதை தடுக்க, உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. காய்கறி தொகுப்பை 90256 53376, 044 2479113 என்ற எண்களில் சென்னை மக்கள் ஆர்டர் செய்யலாம் என்று சென்னை வளர்ச்சி குழும செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இடையூறு கூடாது
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறுமின்றி அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் கிடைக்க வகை செய்யும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் இணைந்து ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதாவது, நடமாடும் மளிகை மற்றும் காய்கறி அங்காடிகள் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் ஆணையர் பிரகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது.
நடமாடும் கடைகள்
சென்னை மாநகரம் முழுவதும் சுமார் 5,000 மூன்று சக்கர சைக்கிள்கள் மற்றும் 2000 சிறிய மோட்டார் வாகனங்களின் மூலம் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் தொடங்கப்படும். இந்த நடமாடும் காய்கறி மற்றும் மளிகை வாகனங்களில் செல்லும் வணிகர்கள் கையுறை, முகக்கவசங்கள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து கொண்டுதான் விற்பனையில் ஈடுபடுவார்கள்.
உணவு பொருள் பதுக்கல்
இதனிடையே, உணவுப் பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டு சிறைத் தண்டனை என்று, உள்துறை செயலாளர் எச்சரிக்கை பிறப்பித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று, மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.