பணியில் இருந்தபோதே போக்குவரத்து காவலர் மாரடைப்பால் மரணம்... ஸ்டாலின் இரங்கல்
சென்னை: சென்னையில் போக்குவரத்து காவலர் ஒருவர் பணியில் இருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து காவலராக இருந்தவர் அருண் காந்தி. இவர் வழக்கம் போல் நேற்று பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் போதே அவர் உயிர் உடலை விட்டு பிரிந்துவிட்டது. இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட்டு அருண்காந்தி உயிரிழந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் அருண்காந்தி ஈடுபட்டு வந்துள்ளார். மயிலாப்பூர் பகுதியில் ஓரளவு அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் பரிச்சயமானவர். ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அருண்காந்தியை போல் ஆயிரக்கணக்கான போலீஸார் சென்னை முழுவதும் இரவு பகல் பாராது பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து பணிச்சுமை இருந்துவருவதால் ஒரு வித மன அழுத்தத்திற்கு அவர் ஆளாகியுள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து காவலர் அருண்காந்தி பணியில் இருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிகழ்வு வேதனையை தருவதாகவும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், காவலர்களுக்கு பணிச்சுமை, மன அழுத்தம் ஏற்படாத வகையில் அவர்கள் நலனில் அரசும், தமிழக காவல்துறை தலைவரும் அக்கறை காட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.