மேயர் பதவிக்கான ரேஸ்... அதிமுகவில் முட்டி மோதும் பிரமுகர்கள் யார்?
சென்னை: அதிமுக சார்பில் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட முக்கிய பிரமுகர்கள் பலர் முட்டி மோதுவதால், வேட்பாளர்களை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதுவும் குறிப்பாக சென்னை, கோவை, திண்டுக்கல், திருச்சி, ஆகிய மாநகராட்சிகளில் கட்சியின் சீனியர்கள் தங்கள் வாரிசுகளை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அது தொடர்பான பரபரப்பு தமிழகத்தில் பற்றிக்கொண்டது.
புது லுக்கில் முகிலன்.. தமிழ் மண் தமிழருக்கானது.. விட மாட்டோம்.. திருச்சி சிறை வாசலில் ஆவேசம்
விருப்பமனு
உள்ளாட்சித் தேர்தல் டிசம்பரில் நடைபெறும் எனக் கூறப்படும் நிலையில், திமுக, அதிமுக, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கட்சியினருக்கு விருப்பமனுக்கள் விநியோகித்து முடித்து விட்டன. இரண்டு கட்சிகளிலுமே மேயர் பதவிக்கு முக்கிய பிரமுகர்கள் போட்டியிட விரும்புவது, அவர்கள் விருப்ப மனு பெற்றுக்கொண்டதில் இருந்தே தெரிய வருகிறது.
அதிமுகவுக்கு சென்னை
தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் சென்னையில் அதிமுக போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. இதனிடையே யாரை மேயர் வேட்பாளராக நிறுத்துவது என்பது தான் தலைமைக்கு உள்ள குழப்பமாம். அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன், ஜே.சி.டி.பிரபாகர், பாலகங்கா ஆகியோரில் யாருக்காவது ஒருவருக்கு வாய்ப்பு தரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பெண் வேட்பாளர்
கோவை மாநகராட்சி பெண்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அங்கு யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற முடிவை வேலுமணி கையில் கொடுத்துவிட்டார்களாம் ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும்.. அதிமுக பிரமுகர்கள் கே.ஆர்.ஜெயராமன், முன்னாள் எம்.பி.கோபாலகிருஷ்ணன், முன்னாள் துணை மேயர் திரவியம் ஆகியோர் தங்களது மனைவிகளை மேயர் ஆக்க முயற்சி செய்து வருகிறார்கள். இதனிடையே கோவை பாஜகவுக்கு கொடுக்கப்பட்டாலும் ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை.
அமைச்சரின் மகன்
திருச்சியை பொறுத்தவரை அதிமுகவில் மேயர் வேட்பாளருக்கு கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. இரண்டு முறை எம்.பி.யாக இருந்தவரும், ஜெயலலிதா மறையும் வரை அவரது குட்புக்கில் இடம் பெற்றவருமான ப.குமார் தன்னைத் தான் மேயர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என தலைமையிடம் ஒற்றைக்காலில் நிற்கிறார். அமைச்சர் வெல்லமண்டி நடராஜனோ தனது மகன் ஜவஹர்லால் நேருவுக்கு மேயர் சீட் வாங்க போராடி வருகிறார்.
உறவினர்களுக்கு சீட்
திண்டுக்கல் மாநகராட்சியை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தனது மைத்துனர் கண்ணனுக்கு சீட் பெறும் எண்ணத்தில் இருந்தார். ஆனால் அது பெண்கள் கோட்டாவில் உள்ளதால், முன்னாள் மேயரும், மாவட்டச் செயலாளருமான மருதராஜ் தனது மகள் பொன் முத்துவை மேயராக்கி அழகுபார்க்க நினைக்கிறார்.