மோடி விழாவில் திருக்குறளை மறந்த மத்திய அமைச்சர் எல் முருகன்! அடுத்த நடந்தது என்ன?
சென்னை: தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைத்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடியை, மத்திய இணையமைச்சர் எல் முருகன் வரவேற்று பேசினார். அப்போது அவர் திடீரென்று தான் கூற வந்த திருக்குறளை மறந்ததால் புன்சிரிப்போடு அதனை நினைவுப்படுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந் நிகழ்ச்சியில் பல்வேறு திட்ட பணிகளை துவங்கி வைத்தார்.
தமிழகத்தில் பணிகள் முடிந்த திட்டங்களை துவங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். இந்த திட்ட பணிகளின் மொத்த மதிப்பீடு ரூ.31,400 கோடியாகும்.
உங்கள் முடி ஏன் வெள்ளையாக மாறிவிட்டது? தமிழக பாஜக பிரமுகரிடம் கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி
முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இந்த விழாவில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றனர். விழா மேடையில் இருந்து சிறப்பு ரயில் சேவை உள்பட 11 திட்டங்களுக்கான கல்வெட்டுகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ‛‛ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். கச்சதீவை மீட்க வேண்டும். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அலுவல் மொழியாக தமிழ் அங்கீகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். மேலும் நாட்டின் வளர்ச்சிக்கும்,பொருளாதாரத்துக்கும் தமிழகம் முக்கிய பங்காற்றி வரும் நிலையில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்'' என்றார்.
பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர், ‛‛தமிழ்நாடு வருவது எப்போதும் மகிழ்ச்சிக்கு உரியது. தமிழ்நாட்டு மக்களின் கலாசாரம் சிறப்பு வாய்ந்தது. தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாசாரம் உலகளாவியது. சென்னை முதல் கனடா வரை மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை சேலம் முதல் தென்ஆப்பிரிக்கா வரை பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை. இலங்கை கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. இந்த சூழல் நிச்சயமாக உங்களுக்கு கவலையை தரும். ஒரு நெருங்கிய நண்பனாகவும், அண்டை நாடாகவும் இந்தியா இலங்கைக்கு அனைத்து வகையான உதவிகளையும் வழங்கி வருகிறது. இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி மலையக தமிழர்கள் உட்பட அந்நாட்டில் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு தனி நபர்கள், இந்திய அமைப்புகள் உதவி செய்துள்ளனர்'' என்றார்.
வரவேற்ற மத்திய இணையமைச்சர்
முன்னதாக இந்த விழாவில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் வரவேற்று பேசினார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசினார். அவர் கூறுகையில், ‛‛தமிழகத்தின் உள்கட்டமைப்புக்கு இன்று மிக முக்கியமான நாள். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் சாலை, ரயில்வே திட்டங்கள் மூலம் அடிப்படை கட்டமைப்புகளை பிரதமர் மேம்படுத்துகிறார். புதிய கல்விக் கொள்கை வலிமையான இந்தியாவை உருவாக்கும். புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும். அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்தில் பிரதமர் மோடி கண்ணும் கருத்துமாக உள்ளார்'' என்றார்.
திருக்குறளை மறந்த அமைச்சர்
மேலும் மத்திய அரசின் திட்டங்களையும், பயனாளிகளின் விபரம், நிதி ஒதுக்கீடு பற்றியும் அவர் குறிப்பிட்டு பேசினார். இந்த வேளையில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாட்டை திருக்குறளை மேற்கொள்காட்டி பேச முயன்றார். அப்போது திடீரென்று அவர் திருக்குறளை மறந்து நின்றார். இருப்பினும் அடுத்த சில வினாடிகளில் அவர் திருக்குறளை நினைப்படுத்தி கூறினார்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
என்ற திருக்குறளை அவர் மேற்கொள்காட்டி ‛சொல்வதை அனைத்தையும் பிரதமர் மோடி செய்து காட்டுகிறார்‛ என புகழாரம் சூட்டினார்.