மத்திய அரசுக்கு சளைத்தவர்களா நாங்கள்.! புதிய பஸ்களுக்குள் தமிழுக்கு பதில் இந்தி வாக்கியங்கள்
சென்னை: தமிழகத்தில் சமீபத்தில் முதல்வர் பழனிசாமியால் துவக்கி வைக்கப்பட்ட புதிய பேருந்துகளினுள், தமிழுக்கு பதிலாக ஆங்கிலம் மற்றும் இந்தி வாக்கியங்கள் இடம் பெற்றுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரூ.159 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் பழனிசாமி கடந்த 4-ம் தேதி தொடங்கி வைத்தார். இதில் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100, அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 150, கும்பகோணம் கோட்டத்திற்கு 110 , மதுரைக்கு 50, கோவை மற்றும் நெல்லைக்கு தலா 30, சேலத்திற்கு 20 ,விழுப்புரத்திற்கு 10 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்த பின்னர் இந்த பேருந்துகள் அனைத்தும் விரைவுப்போக்குவரத்துக்கழகம், மாநகரப்போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பல்வேறு கோட்டங்களுக்குபிரித்து அனுப்பப்பட்டன
இந்நிலையில் தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய பேருந்துகளினுள் அவசர வழி என்று தமிழில் எழுதுவதற்கு பதில் அந்த வார்த்தை ஆங்கிலம் மற்றும் இந்தியில் இடம் பெற்றுள்ளது காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதே போல தீயணைப்பான் உள்ளிட்ட அவசர குறிப்புகள் பலவும் தமிழில் எழுதப்படுவதற்கு பதில், ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டுள்ளது.
இத தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தமிழக அரசின் இந்த செயலுக்கு, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கருத்து பதிவிட்டுள்ளார்.
தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை.மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால்,நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம்.#stopHindiImposition pic.twitter.com/SqAQfEJI6N
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 7, 2019
கனிமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை என்பது கண்டிக்கத்தக்கது.மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால்,நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல அதிமுக அரசு இந்தியை திணிப்பதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்படும் மாநில பேருந்துகளில் கூட இந்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளது, தமிழர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.