மீண்டும் அதிகார மையமாகிறதா போயஸ் கார்டன்...? சசிகலாவுக்காக கட்டப்பட்டு வரும் புதிய பங்களா
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் இல்லம் அமைந்துள்ள போயஸ் கார்டனில் சசிகலாவுக்காக பிரம்மாண்ட பங்களா ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
ஸ்ரீஹரிசந்தனா ரியல் எஸ்டேட்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் கட்டுமானத்திற்கான அனுமதி பெறப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
பெங்களூரு அக்ரஹாரா சிறையில் இருந்து விரைவில் சசிகலா விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலையம் அண்மையில் அரசுடமையாகப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்...ஆதரித்தவர் கருணாநிதி...எதிர்த்தவர் ஜெயலலிதா...திமுக எம்.பி. கேள்வி!!
போயஸ் கார்டன்
சென்னையின் அதிமுக்கிய வி.வி.ஐ.பி.க்கள் மட்டுமே வசிக்கக் கூடிய பகுதி தான் போயஸ் கார்டன். இங்கு தான் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லம் அமைந்துள்ளது. அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாகவே திரைத்துறை மூலம் ஈட்டிய பணத்தை கொண்டு ஜெயலலிதா இந்த வீட்டை வாங்கினார். ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியாகவும், தோழியாகவும் சுமார் 30 ஆண்டுகாலம் அவருடன் இருந்தவர் வி.கே. சசிகலா. கடந்த 2017-ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாக அவர் இப்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார்.
அரசுடமை
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தை தமிழக அரசு நினைவில்லமாக அறிவித்ததுடன் அரசுடமையாகவும் ஆக்கிக்கொண்டது. இதனால் சிறையில் இருந்து விடுதலையான பிறகு மீண்டும் வேதா நிலையத்தில் சசிகலாவால் தங்க முடியாது. மேலும், வாரிசு அடிப்படையில் ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகள் வழக்குத் தொடர்ந்துள்ளதால், புதிதாக பங்களா கட்டி அதில் குடியேற உள்ளார் சசிகலா. இந்த புதிய பங்களா வேறு எங்கும் இல்லை, அதே போயஸ் கார்டனில் தான். அதுவும் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்திற்கு நேர் எதிரே தான்.
முழுவீச்சில் பணிகள்
சசிகலாவுக்காக புதிய பங்களா கட்டுமானப் பணிகள் முழு மூச்சில் நடைபெற்று வருகின்றன. இளவரசியின் மருமகன் கார்த்திகேயன் தான் இந்தப் பணிகளை கவனித்துக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. சசிகலா, இளவரசி ஆகியோர் அந்த வீட்டில் குடியேறுவார்கள் எனக் கூறப்படுகிறது. ஸ்ரீஹரிசந்தனா ரியல் எஸ்டேட்ஸ் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தின் பெயரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சி.எம்.டி.ஏ. திட்ட அனுமதி வழங்கியுள்ளது.
சசிகலா வருகை
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையான பின்பு போயஸ் கார்டனில் தனக்கான புதிய வீட்டில் சசிகலா குடியேறுவதன் மூலம், மீண்டும் போயஸ் கார்டன் அதிகார மையமாகுமோ என அரசியல் விவாவதங்கள் நடைபெற்று வருகின்றன. சசிகலாவுக்காக கட்டப்பட்டு வரும் புதிய பங்களா வேதா நிலையத்தை போலவே இரண்டு அடுக்குமாடிகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.