தமிழகத்தில் கொரோனாவால் 10 நாளில் 1000 பேர் பலி.. குமரி, கோவை, உள்பட 15 மாவட்டங்களில் கிடுகிடு
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றால் 10 நாளில் மட்டும் 1000 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஆகஸ்ட் 3ம் தேதி முதல் தினமும் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகிறார்கள். செங்கல்பட்டு சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, விருதுநகர், தேனி உள்பட 15 மாவட்டங்களில் அதிகமாக உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் சராசரியாக 5500க்கும் அதிகமாக உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை தினமும் சராசரியாக 100ஐ தாண்டி உள்ளது. தொற்று குறைந்து வந்தாலும் உயிரிழப்பு அதிகரிப்பது கவலையை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூன் 27ம் தேதி மரண எண்ணிக்கை ஆயிரத்தைகடந்தது ஆனால் இந்த எண்ணிக்கை ஜூலை 13ம் தேதி 2ஆயிரத்தையும், ஜூலை 22ம் தேதி 3 ஆயிரத்தையும் கடந்தது. ஆகஸ்ட் 1ம் தேதி இந்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் சென்னையில் தொற்று குறைந்து வந்தாலும் உயிரிழப்பு அதிகமாகவே உள்ளது.
கோயம்புத்தூரில் அதிகரிக்கும் கொரோனா... 1,561 பேருக்கு சிகிச்சை!!
கன்னியாகுமரியில் அதிகம்
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் மரண விகிதம் மிக அதிகமாக உள்ளது. ஜூலை 31ம் தேதி 54 பேர் மட்டும் உயிரிழந்த நிலையில் ஆக்ஸ்ட் 11ம் தேதி 140 ஆக உயர்ந்துள்ளது. கன்னியாகுமரியில் ஜூலை 31ம் தேதி 39 மரணங்கள் பதிவாகி இருந்த நிலையில் இப்போது ஆகஸ்ட் 11ம் தேதி நிலவரப்படி 93 ஆக உயர்ந்துள்ளது.
தென்காசியில் உயர்வு
தென்காசியில் ஜூலை 31ம் தேதி 19 ஆக இருந்த மரண எண்ணிக்கை ஆகஸ்ட் 11ம் தேதி நிலவரப்படி 54 ஆக உயர்ந்துள்ளது. தேனியில் ஜூலை 31ம் தேதி 62 ஆக இருந்த மரண எண்ணிக்கை ஆகஸ்ட் 11ம் தேதி நிலவரப்படி 99 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகரில் ஜூலை 31ம் தேதி 85 ஆக இருந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி 139 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் 237 ஆக இருந்த மரண எண்ணிக்கை 297 ஆக உயர்ந்துள்ளது. திருநெல்வேலியில் ஜூலை 31ம் தேதி 38 ஆக இருந்த எண்ணிக்கை, இப்போது 99 ஆக உயர்ந்துள்ளது.,
11 நாளில் 1100
தமிழகத்தில் இந்த 11 நாட்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி 99 ஆகவும், ஆகஸ்ட் 2ம் தேதி 98 ஆகவும், ஆகஸ்ட் 3ம் தேதி 109 ஆகவும், ஆகஸ்ட 4ம் தேதி 108 ஆகவும், ஆகஸ்ட் 5ம் தேதி 112 ஆகவும் உயர்ந்தது. ஆகஸ்ட் 6ம் தேதி கொரோனாவால் 110 பேரும், ஆகஸ்ட் 7ம் தேதி 119 பேரும், ஆகஸ்ட் 8ம் தேதி 118 பேரும், ஆகஸ்ட் 9ம் தேதி 119 பேரும், ஆகஸ்ட் 10ம் தேதி 114 பேரும் மரணம் அடைந்துள்ளனர் ஆகஸ்ட் 11ம் தேதி நேற்று ஒரு நாளில் 118 பேர் உயிரிழந்தனர்.
எங்கு அதிக பலி
நேற்று மிக அதிகபட்சமாக சென்னையில் 23 பேரும், கன்னியாகுமரில் 13 பேரும் உயிரிழந்தனர். கோவை, திருநெல்வேலி மற்றும் திருவள்ளூரில் தலா 8 பேரும். தஞ்சாவூரில் 6 பேரும் பலியாகினர். மேலும் திருச்சி, தென்காசி, திருப்பூர், மதுரை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று 4 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவால் இதுவரை தமிழகத்தில் 5159 பேர் பலியாகி உள்ளனர்.